நேர்­மையே சிங்­கப்­பூர் அர­சி­ய­லின் அடித்­த­ள­மாக அமை­ய­ வேண்­டும்

நேர்­மையே சிங்­கப்­பூர் அர­சி­ய­லின் அடித்­த­ள­மாக அமை­ய­ வேண்­டும்

10 mins read
5aca1759-aba2-4918-a8a8-a5a7039b3031
ஒரு நாட்டின் ஜனநாயக ஆட்சிமுறையின் தரமானது, மக்­கள் எதைச் சரி­யென்று அல்­லது தவ­றென்று கரு­து­கி­றார்­கள், எதை முக்­கி­ய­மென நினைக்­கி­றார்­கள், எந்த நோக்­கங்­களை ஆத­ரிக்­கி­றார்­கள், எந்­தக் கொள்­கை­க­ளைக் கொண்­டுள்ளனர் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறாகப் பேசியதன் மீதான நாடாளுமன்ற சிறப்புரிமைகள் விசாரணைக் குழுவின் அறிக்கை தொடர்பாகப் பிரதமர் லீ சியன் லூங் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேசினார். பிரதமர் உரையின் முக்கியப் பகுதிகள் இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்­சி­நி­ரல் அட்டவணைப்படி, நாடா­ளு­மன்றச் சிறப்­பு­ரி­மை­கள் குழு­வின் அறிக்கை கிடைக்­கப் பெற்­ற­தைத் தொடர்ந்து, நாடா­ளு­மன்­றம் என்ன நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டும் என்­பது பற்றி நாம் விவா­திக்­கி­றோம்.

ஆனால் அவைத் தலை­வர் சற்று­முன்­னர் நம்­மி­டம் சொன்­ன­து­போல், ஜன­நா­யக ஆட்­சி­முறை சிங்­கப்­பூரில் எவ்­வாறு இயங்­க­வேண்­டும் என்ற பரந்த பிரச்­சினை நம்­முன் இருக்­கிறது.

நமது ஜன­நா­யக ஆட்சி­முறை சரி­யாக இயங்கு­வ­தற்­குத் தேவை­யான இன்றியமையாத அமைப்­பு­கள், வழக்­கங்­கள், விழு­மி­யங்­கள் யாவை? அந்த அமைப்­பு­கள், வழக்­கங்­கள், விழு­மி­யங்­கள் ஆகி­ய­வற்­றைப் பாது­காக்க, இந்­தப் பொதுப்­படை­யான கோட்­பா­டு­களை, தற்­போது நம்­முன் இருப்­ப­து­போன்ற குறிப்­பிட்ட சூழ்­நி­லை­களில், எவ்­வாறு செயல்­படுத்தப் போகி­றோம்? நம் நாடு நெடுங்­கா­லத்­திற்கு மகிழ்ச்­சி­யும், செழிப்­பும், வளர்ச்­சி­யும் அடை­யும்­வண்­ணம், எதிர்­கா­லத்­திற்­காக நமது ஜன­நா­யக ஆட்­சி­மு­றையை நாம் எப்­படிக் கட்­டிக்­காக்­கப் போகி­றோம்? நான் இன்று பேச விரும்­பும் மேலும் மூன்று அடிப்­ப­டை­யான கேள்­வி­கள் இவை.

அரசாங்க அமைப்புகளின் அடிப்படை

ஒரு நாட்­டின் ஜன­நா­யக ஆட்­சி­முறை­யின் தரம், அதன் மக்­க­ளின் விழு­மி­யங்­க­ளைச் சார்ந்­தி­ருக்­கிறது: அதா­வது, மக்­கள் எதைச் சரி­யென்று அல்­லது தவ­றென்று கருது­கி­றார்­கள், எதை முக்­கி­ய­மென நினைக்­கி­றார்­கள், எந்த நோக்­கங்­களை ஆத­ரிக்­கி­றார்­கள், எந்­தக் கொள்­கை­க­ளைக் கொண்­டி­ருக்­கிறார்­கள் என்­பன. நீங்­கள் வர­லாற்­றின் எந்­தக் கால­கட்­டத்தை எடுத்­துக்­காட்­டா­கப் பார்த்­தா­லும், திறம்­பட இயங்­கும் ஜன­நா­யக ஆட்­சி­களில் தெளி­வான, வலு­வான வழக்­கங்­கள் நடப்­பி­லி­ருக்­கும்.

ஆட்­சிக்கு உட்­ப­டு­வோர், ஆட்­சிப் பொறுப்­பேற்­றி­ருப்­போர் ஆகிய இரு தரப்­பும், அல்­லது என்­றா­வது ஒரு நாள் ஆட்­சிப் பொறுப்­பேற்க முயற்சி செய்­வோர் இந்த வழக்­கங்­க­ளைச் சீர்­தூக்கி கட்­டிக்­காப்­பார்­கள். ஆரோக்­கி­ய­மான ஜன­நாயக ஆட்­சி­மு­றை­கள், ஊழ­லுக்கு அடி­ப­ணி­யாத நற்­பண்­பா­ளர்­களை இப்­ப­டித்­தான் தேர்ந்­தெ­டுக்­கின்­றன. நல்ல ஜன­நா­ய­கம் நல்ல ஆளு­மையை உரு­வாக்­கும், நல்ல ஆளுமை நல்ல அர­சி­யலை உரு­வாக்­கும். இந்­தக் கண்­ணி­ய­மான சுழல்­வட்­டத்­திற்கு வலு­வான அமைப்­பு­கள் அடிப்­ப­டை­யா­கத் திகழ்ந்து, நிலை­நாட்­ட­வேண்­டும்.

ஜன­நா­யக ஆட்­சி­மு­றை­யின் உச்ச அமைப்பு நாடா­ளு­மன்­றம். நாட்­டின் ஆக முக்­கிய விவ­கா­ரங்­கள் கலந்­தா­ரா­யப்­ப­டு­வ­தும், சட்­டங்­கள் இயற்­றப்­ப­டு­வ­தும், நிதி ஒதுக்­கீ­டு­க­ளுக்கு வாக்­க­ளிக்­கப்­படு­வ­தும் அங்­கு­தான். அர­சாங்­கம் இவற்­றுக்­கான செயல்­மு­றை­களை வகுத்து, கொள்­கை­க­ளைப் பரிந்­து­ரைக்­கும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதே சம­யத்­தில், நாடா­ளு­மன்­றத்­தின்­வழி பொது­மக்­க­ளுக்­கும், ஆளும் கட்சி மக்­க­ளின் ஆத­ரவை இழக்க நேரிட்­டால் அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கா­கக் காத்­தி­ருக்­கும் அதே வேளை­யில் அர­சாங்­கத்­தின் செயல்­பா­டு­க­ளைக் கவ­னிக்­கும் எதிர்க்­கட்­சிக்­கும் அர­சாங்­கம் பதில் அளிக்­க­வேண்­டும்.

இந்த முக்­கியப் பணியை நிறை­வேற்ற, நாடா­ளு­மன்­றம் மதிக்­கப்­ப­ட­வேண்­டும். அதன் உறுப்­பி­னர்­கள், செயல்­மு­றை­கள், நடை­மு­றை­கள் நம்­பப்­ப­ட­வேண்­டும்.

நாடா­ளு­மன்­றத்­தின் நன்­ம­திப்­பை­யும் நிலைப்­பாட்­டை­யும் பாது­காக்க, தெளி­வான வழக்­கங்­களும் ஊழ­லுக்கு உட்­ப­டாத பண்­பு­களும் அவ­சி­யம்.

நாடா­ளு­மன்­றத்­தின் நிலைப்­பாடு கேள்­விக்­கு­ரிய ஒன்­றா­னால், ஆட்சி­முறை இயங்க முடி­யாது. அத­னால்­தான், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் நடத்­தைக்­குச் சரி­யான வழக்­கங்­களை நிலை­நாட்­டு­வ­தும் அவற்­றைக் கவ­ன­மா­கப் பாது­காப்­பதும் அவ­சி­யம்.

எப்­போ­தும் உண்­மையே பேச­வேண்­டும். கடி­ன­மாக அல்­லது சங்­க­ட­மாக இருந்­தா­லும், குறிப்­பாக அப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­க­ளில்­தான், சிங்­கப்­பூ­ருக்­குச் சரி­யா­ன­தைச் செய்­ய­வேண்­டும். ஏதா­வது தவ­றாக நடந்­தால், அல்­லது தவறு செய்­யப்­பட்­டி­ருந்­தால், அதற்­குத் தாமா­கப் பொறுப்­பேற்க வேண்­டும். உண்­மை­யைத் திரித்து மறைப்­ப­தற்­காக மூடி மறைக்­கவோ, சுற்­றி­வ­ளைக்­கவோ, அல்­லது ஒரு பொய்யை மறைக்க மேலும் பொய் சொல்­லவோ கூடாது.

சரி­யான பண்­பு­க­ளைக் கொண்­ட­வர்­க­ளால் மட்­டுமே சரி­யான வழக்­கங்­களை சீர்­தூக்கி கட்­டிக்­காக்க முடி­யும். ஏனெ­னில், வழக்­கங்­கள் என்­பன வெளித்­தோற்­றத்­திற்­காக மக்­கள் உட்­படும் சாதா­ரண சமூக நடை­மு­றை­கள் மட்­டு­மல்ல. அவை மக்­கள் நம்­பிக்கை வைத்து, முக்­கி­யத்­து­வம் அளித்துக் கடைப்­பிடிக்­கும் உளப்­பூர்­வ­மான பண்­பு­க­ளின் வெளிப்­பா­டு­க­ளாக இருக்­க­ வேண்­டும்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அடிப்­ப­டை­யில் நேர்­மை­யா­ன­வர்­களா­க­வும், பேச்­சி­லும் செய­லி­லும் நாண­ய­மா­ன­வர்­க­ளா­க­வும், எப்­போ­தும் தம்மை­வி­டக் கட­மைக்­கும், கட்­சி­யை­விட நாட்­டுக்­கும் முன்­னு­ரிமை அளிப்­ப­வர்­க­ளா­க­வும் இருக்­க­வேண்­டும். நம்­மு­டைய உய­ரிய கடமை, உச்ச விசு­வா­சம் நமது கட்சிமீது இல்லாமல், சிங்­கப்­பூர்­மீது இருக்­க­வேண்­டும். அத­னால்­தான் பதவி ஏற்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், "சிங்­கப்­பூர் குடி­ய­ர­சி­டம் உண்­மை­யா­க­வும் விசு­வா­ச­மா­க­வும்" இருக்க உறு­தி­மொழி எடுக்­கின்­ற­னர். சொல்­லப்­போ­னால், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரோ இல்­லையோ, சிங்­கப்­பூர் அர­சி­ய­லில் ஈடு­பா­டுள்ள ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் இது பொருந்­தும்.

திரு பிரித்­தம் சிங்­கின் முன்­னாள் உத­வி­யா­ள­ரான பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர் லோ பெய் யிங் குழு­வி­டம் சொன்­ன­து­போல், "இது எனக்கு மிகுந்த மன­வே­தனை அளிக்­கிறது. ஆனால், வேறு எதை­யும்விட, என் நாட்­டுக்கு உண்­மை­யாக இருப்­பதே எனக்கு முக்­கி­ய­மா­னது." இந்த அவை­யில் இருக்­கும் ஒவ்­வொ­ரு­வ­ரும் அவர் சொன்­னதை ஏற்­பார்­கள் என நான் நம்பு­கி­றேன்.

இதே வழக்­கங்­க­ளை­யும் பண்பு­களை­யும் சிங்­கப்­பூர் மக்­கள், வாக்­கா­ளர்­கள் - ஆத­ரித்து, வலி­யு­றுத்தி, நிலை­நாட்­டு­வது நமது ஜன­நா­யக ஆட்­சி­மு­றைக்கு அவ­சி­யம். அப்­போ­து­தான், திரு­வாட்டி லோ செய்­தது­போல, அவர்­க­ளா­லும் தவறு நடக்­கும்­போது அதை உண­ர­வும், அதி­கா­ரத்­தில் இருப்­ப­வர்­க­ளின், அல்­லது அதி­கா­ரத்தை ஏற்க விரும்பு­ப­வர்­க­ளின் செய்­கை­கள் இந்த உயர்­த­ரத்தை எட்­டா­த­போது அவர்­க­ளைப் பொறுப்­பேற்­கச் செய்­ய­வும் முடி­யும். ஜன­நா­யக ஆட்­சி­முறை இப்­ப­டித்­தான் சரி­யாக இயங்­க­மு­டி­யும்.

பொதுமக்களின் நம்பிக்கை

வாக்­கா­ளர்­க­ளி­டத்திலும் அவர்­களது தலை­வர்­க­ளி­டத்திலும் சரி­யான பண்­பு­களை வளர்ப்­பது பல ஆண்­டு­கா­லப் பணி­யா­கும். அதற்கு இடை­வி­டாத முயற்­சி­யும் உளப்­பூர்­வ­மான ஆர்­வ­மும் தேவை. ஆனால், அது எப்­போ­தும் வெற்றி அடை­வது இல்லை.

பெரும்­பா­லான நாடு­கள் உய­ரிய கொள்­கை­க­ளை­யும் மேன்­மை­யான பண்­பு­க­ளை­யும் அடிப்­ப­டை­யா­கக் கொண்டு செயல்­ப­டத் தொடங்­கு­கின்­றன. ஆனால், நாட்­டைத் தோற்று­வித்த தலை­வர்­கள், முன்­னோ­டித் தலை­மு­றை­யி­னர் ஆகி­யோ­ருக்­குப் பிறகு, அடுத்­த­டுத்த தலை­மு­றை­களில் நிலைமை படிப்­படி­யாக மாறத் தொடங்­கு­கிறது.

தொடக்­கத்­தில் உணர்ச்­சி­வ­சத்­து­டன் செயல்­பா­டு­கள் தொடங்­கு­கின்­றன. சுதந்­தி­ரத்­திற்­கா­கப் போராடி வெற்றி பெற்ற தலை­வர்­கள் பெரும் துணிச்­ச­லும், மிகுந்த கலா­சார உணர்­வும், தலை­சி­றந்த ஆற்­ற­லும் கொண்ட தனித்­து­வ­மா­ன­வர்­க­ளா­கப் பெரும்­பா­லும் இருப்­பார்­கள். அவர்­கள் தீத்­த­ண­லைக் கடந்­து­சென்று மக்­க­ளுக்­கும் நாடு­க­ளுக்­கும் தலை­வர்­க­ளா­கத் தலை­யெ­டுத்­த­னர்.

நம் நாட்டை நிறு­வி­ய­வர்­களும் வலு­வான அடிப்­ப­டை­க­ளை­யும் அமைப்­பு­க­ளை­யும் நிர்­மா­ணிக்க தங்­க­ளால் இயன்ற அனைத்­தை­யும் செய்­த­னர். அப்­போது பிர­தான எதிர்க்­கட்­சி­யாக இருந்த பாரி­சான் சோ‌ஷி­ய­லிஸ் கட்சி 1966ல் நாடாளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யேற முடி­வெ­டுத்து ஒட்­டு­மொத்த ஆட்­சிப் பொறுப்­பை­யும் மக்­கள் செயல் கட்சி­யி­டம் விட்­டுச்­சென்­ற­போது, நம் நாட்டை நிறு­வி­ய­வர்­கள் நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­தை­யும் பல கட்சி ஆட்­சி­மு­றை­யை­யும் நிலை­நாட்­டி­னார்­கள்.

திரு லீ குவான் இயூ அந்­தக் கட்­டத்­தில் ஒரு­முறை விளக்­கி­யது­போல், மக்­கள் செயல் கட்சி முழு ஆதிக்­கம் பெற்­றி­ருந்த நிலை­யில், அவர் அர­ச­மைப்­புச் சட்­டத்தை மாற்றி, ஒரு கட்சி நாட்டை அமைத்­தி­ருக்­க­லாம். ஆனால், அவர் வேண்டு­மென்றே அவ்­வாறு செய்­ய­வில்லை. ஏனெ­னில், தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெல்ல வேண்­டிய அவ­சி­யம் இல்­லா­மல் போனால், ஆளும் கட்சி காலப்­போக்­கில் மெத்­த­ன­மாகி, சிங்­கப்­பூர் பெரும் பாதிப்­பிற்கு உள்­ளா­கக்­கூ­டும் என்­பதை அவர் அறிந்­தி­ருந்­தார்.

அத­னால்­தான் அவர்­கள் அதிக திட­மான வழி­மு­றையை மேற்­கொண்­ட­னர். அர­சி­ய­லில் போட்­டி­யைத் தக்கவைத்­த­னர். நாடா­ளு­மன்­றம், நீதித்­துறை, அர­சாங்­கச் சேவை, காவல்­துறை, ஆயு­தப்­படை, பிற்­பாடு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அதி­பர், அதி­பர் ஆலோ­சனை மன்­றம் ஆகிய அமைப்­பு­களை அவர்­கள் ஏற்படுத்தினர். முக்­கி­ய­மான ஒரு சிலர் அனைத்து விசை­க­ளை­யும் அழுத்தி, அனைத்­தை­யும் செயல்­படச் செய்­வதை மட்­டுமே சார்ந்து இ­ருக்­கா­மல், அதிக மீள்­தி­றன்­மிக்க அடிப்­ப­டை­யில் சிங்­கப்­பூர் செயல்­படத் துணைபுரி­வது இதன் நோக்­கம்.

இருந்­தா­லும், இந்த அமைப்­பு­களை இயக்­கு­வ­தற்கு நல்­ல­வர்­கள் தேவை. அத­னால் அமைச்­சர்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், நீதி­பதி­கள், அர­சாங்க அதி­கா­ரி­கள், பற்­பல துறை­க­ளின் வல்­லு­நர்­கள் ஆகி­யோ­ரைச் சேர்த்து, பயிற்சி அளித்து, பணி­யில் அமர்த்த வேண்­டிய அவ­சி­யம் அவர்­க­ளுக்கு இருந்­தது. ஆற்­றல், கடப்­பாடு, பொதுச் சேவை உணர்வு, அனைத்­தி­லும் மேலாக நேர்மை, கண்­ணி­யம் ஆகிய பண்­பு­க­ளு­டன், கட­மைக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் முன்­னு­ரிமை அளித்து இந்­நாட்டை வெற்றி அடையச் செய்­வார்­கள் என சிங்கப்­பூ­ரர்­க­ளால் நம்­பக்­கூ­டி­ய­வர்­க­ளாக அவர்­கள் இருக்­க­வேண்­டும். அப்­படித்­தான் நமது இன்­றைய ஆட்சி­முறை அமைக்­கப்­பட்­டது.

நமக்கு வழி­வ­ழி­யா­கக் கிடைத்த இந்த ஆட்­சி­மு­றை­யைப் பாது­காப்­பதும் தொடர்ந்து நிர்­மா­ணிப்­ப­தும் நம் அனை­வ­ரது அடுத்­த­டுத்த தலை­மு­றை­க­ளின் கடமை. நாம் இதைச் செய்­வ­தற்கு நேர்­மை­யைக் கட்­டிக்­காத்து, விதி­மு­றை­க­ளை­யும் தரங்­க­ளை­யும் நிலை­நாட்டி, அனை­வருக்­கும் அதே விதி­மு­றை­க­ளைச் சம­மாக விதித்து, யாருமே சட்­டத்­திற்கு அப்­பாற்­பட்­ட­வர்­க­ளாக இல்­லா­ததை உறுதி செய்­ய­வேண்­டும்.

நம்­மால் இதை நிலை­யா­க­வும், இடை­வி­டா­ம­லும், தயக்­க­மில்­லா­மலும் செய்ய முடிந்­தால், சீரான செயல்­பாட்டை நாம் அடைய முடி­யும். நமது தலை­வர்­கள், செயல்­முறை­கள், அமைப்­பு­கள் மீது மக்­க­ளுக்கு நம்­பிக்கை இருக்­கும். ஆட்சிக்கு உட்­ப­டு­வோ­ரும் ஆட்சி புரி­வோ­ரும் சரி­யான வழக்­கங்­களை­யும் பண்­பு­க­ளை­யும் கடைப்­பி­டித்து செய்­கை­களில் வெளிப்­ப­டுத்­தும்­போது ஜன­நா­ய­கம் முதிர்ச்­சி­ அடைந்து, ஆழ­மாக வேரூன்றி, மீள்­தி­றனை வளர்த்­துக்­கொள்­ளும். சிங்­கப்­பூர் தொடர்ந்து செழிப்­ப­டை­யும்.

ஆனால் நாம் நம்மை மெத்­தனமடைய அனு­ம­தித்­தால் இங்­கும் அங்­கும், இந்த ஒரு­முறை மட்­டும் என நினைத்­துக்­கொண்டு தரங்­களைக் கொஞ்­சம் தளர்த்­தி­னால், பொய்­யைக் கண்­டு­கொள்­ளா­மல் விட்­டால் குறை­பா­டற்ற சுழல்­வட்­டம் தட்­டுத்­தடு­மாறி தோல்வி அடை­யத் தொடங்­கும்.

சிங்­கப்­பூர் சரிந்­து­வி­டா­மல் எப்­போ­தும் உச்­சத்­தில் இருப்­பதை உறுதிசெய்­யும் இந்­தக் குறை­பா­டற்ற சுழல்­வட்­டம் நீடித்து நிலைப்­ப­தற்­கான முக்­கிய கார­ணம் என்ன?

அது­தான் நம்­பிக்கை.

சிங்­கப்­பூர் இன்று நம்­பிக்கை மிகுந்த சமு­தா­ய­மா­கத் திக­ழ­லாம். ஆனால், அந்­நி­லைமை என்­றென்­றும் நீடிக்­கும் என்­ப­தற்கு எந்த உத்­த­ர­வா­த­மும் இல்லை. சரி­யான பண்­பு­க­ளு­டன் தவ­று­க­ளைச் சுட்­டிக்­காட்டி, தேவை­யா­ன­போது தண்­டனை அளித்து, நமது அமைப்­பு­களின் புனி­தத்­தைக் கட்­டிக்­காத்து, பொது­மக்­க­ளின் நம்­பிக்­கையை மெத்­த­ன­மா­கக் கரு­தா­மல், பொய்­களும், உண்­மைக்­குப் புறம்­பா­ன­வை­யும், போலி பாசாங்­கு­களும் அர­சி­ய­லில் ஏற்­கப்­படும் வழக்­கங்­களா­கி­விட அனு­ம­திக்­காத தலை­வர்­கள் நமக்கு இருப்­பதை உறு­தி­செய்து, நமது உயர் தரங்­களை உறு­தி­யு­டன் நிலை­நாட்­டு­வது அவ­சி­யம்.

சிறப்புரிமைகள் குழு விசாரணைக்கு இட்டுச் சென்ற சம்பவங்கள்

சிறப்­பு­ரி­மை­கள் விசா­ர­ணைக் குழு­வின் அறிக்­கைக்கு நாடா­ளு­மன்­றம் என்ன நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்­பதை நாம் விவா­திக்­கை­யில், இவை­தான் அபா­யத்­தில் உள்­ளன.

திரு­வாட்டி ரயீசா கான் நாடாளு­மன்­றத்­தில் பொய் சொன்­னார். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மூன்­றாம் தேதி இருமுறை­யும், இரண்டு மாதங்­க­ளுக்­குப் பின்­னர் கேள்வி கேட்­கப்­பட்­ட­போது மூன்­றா­வது முறை­யும் பொய் சொன்­னார். பிற்­பாடு, நாடா­ளு­மன்­றத்­தில் பொய் சொன்­னதை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

நாடா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மை­க­ளின் இந்த மீற­லைக் கையா­ளு­வ­தற்­காக, விசா­ர­ணைக் குழுவை அமைத்­தோம். திரு­வாட்டி கானும் மற்ற சாட்­சி­களும் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­ட­னர். விசா­ர­ணைக் குழு தீர விசா­ரித்த பிறகு, நியா­ய­மான கார­ணங்­க­ளு­டன் ஒரு முடிவை எட்­டி­யது: திரு­வாட்டி கான் குற்­ற­வாளி, அவர் பொய் சொன்ன ஒவ்­வொரு சம்­ப­வத்­திற்­கும் அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­வேண்­டும்.

ஆனால் விசா­ர­ணைக் குழு­வின் விசா­ர­ணை­யின்­போது, வேறு இரு முக்­கிய விவ­கா­ரங்­கள் எழுந்­தன. விசா­ர­ணைக் குழு அவற்றை நாடாளு­மன்­றத்­தின் கவ­னத்­திற்­குக் கொண்டு வந்து, அவற்­றைக் கையாளு­வ­தற்­கான யோச­னையை முன்­வைத்­தி­ருக்­கிறது.

முத­லா­வ­தாக, பாட்­டா­ளிக் கட்சி­யின் மூன்று தலை­வர்­கள் திரு பிரித்­தம் சிங், திரு ஃபைசல் மனாப், திரு­வாட்டி சில்­வியா லிம் ஆகி­யோர் திரு­வாட்டி கானை நாடாளு­மன்­றத்­தில் தொடர்ந்து பொய் சொல்­லச் சொன்­னார்­களா என்­பது. அவர்­கள் அப்­படிச் செய்­தி­ருந்­தால், திருவாட்டி கான் நாடா­ளு­மன்­றத்­தில் உண்­மைக்­குப் புறம்­பா­கப் பேசி­ய­து­போல் அது­வும் கடு­மை­யான அல்­லது அதை­வி­டக் கடு­மை­யான ஒழுங்­கீ­ன­மா­கும். நாடாளு­மன்­றம் இத­னைக் கையா­ள­வேண்­டும், ஆனால் இதை­விட மோச­மான இரண்­டா­வது விவ­கா­ரத்­திற்­குத் தெளி­வு­கண்ட பிற­கு­தான்.

தலை­வர் விளக்­கி­ய­து­போல், பாட்­டா­ளிக் கட்­சி­யின் மூன்று தலை­வர்­களும் உண்­மை­யைச் சொல்­வதாக சத்­தி­யப் பிர­மா­ணம் எடுத்த பிறகு, திருவாட்டி கானி­டம் தொடர்ந்து பொய் சொல்­லச் சொன்­னதை மூடி மறைப்­ப­தற்­காக, விசா­ரணைக் குழு­வி­டம் உண்­மைக்­குப் புறம்­பா­ன­வற்­றைச் சொன்­னார்­களா என்­பதே அந்த இரண்­டா­வது விவ­கா­ரம்.

மூன்று நாடா­ளு­மன்ற உறுப்­பினர்­களும் விசா­ர­ணைக் குழு­விடம் விவ­ரித்த அவர்­க­ளது மேன்­மை­யான நோக்­கங்­க­ளுக்­கும், அவர்­கள் உண்­மை­யில் செய்­த­வற்­றுக்­கும், அல்­லது பல சம­யங்­களில், செய்­யத் தவ­றி­ய­வற்­றுக்­கும் இடை­யில் தெளி­வான முரண்­பா­டு­கள் இருந்­தது விசா­ர­ணைக் குழு­வுக்­குப் புலப்­பட்­டது. பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் சொன்­ன­வற்­றுக்கு இடை­யிலும்­கூட கடு­மை­யான முரண்­பா­டு­கள் இருந்­தன.

சத்­தி­யப் பிர­மா­ணத்­தின்­கீழ் உண்­மைக்­குப் புறம்­பா­கப் பேசு­வது சாதா­ரண விவ­கா­ர­மல்ல. உண்­மை­யைச் சொல்­வ­தா­கச் சத்­தி­யம் செய்த பிறகு பொய் சொல்­லும் செயல் இது. இந்த வழக்­கில் ஒரு­முறை, இரு­முறை அல்ல, சில நாள்க­ளுக்கு நீடித்த பல மணி­நேர விசா­ர­ணை­யின்­போது மீண்­டும் மீண்­டும் பொய் நிலை­நாட்­டப்­பட்­டது.

இந்­தப் பொய்­கள் தற்­செ­ய­லா­ன­வையோ அல்­லது சூழ்­நி­லை கார­ண­மா­ன­வையோ அல்ல, தவ­றாக வழி­நடத்தி ஏமாற்­ற­வேண்­டும் என்ற உறு­தி­யான நோக்­கத்­து­டன் வேண்டு­மென்றே முன்­கூட்­டியே திட்­ட­மிட்­டுச் சொல்­லப்­பட்­டவை என்­பது விசா­ர­ணைக் குழு­வின் மதிப்­பீடு. இவை நாடா­ளு­மன்­றச் சிறப்­பு­ரி­மை­க­ளின் மீறல் மட்­டு­மல்ல, நீதி­மன்­றத்­தில் மெய்ப்பிக்கப்­பட்­டால் சத்­தி­யப் பிர­மா­ணத்­தின்­கீழ் அளிக்­கப்­பட்ட பொய் சாட்­சி­ய­மா­கும். பொய் சாட்­சி­யம் அளிப்­பது கடு­மை­யான குற்­றச் செய­லா­கும்.

எனவே, இரண்டு தனித்­தனி பிரச்சினைகள் உள்­ளன. ஒன்று, திருவாட்டி கானி­டம் மூன்று நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பொய் சொல்­லச் சொன்­னார்­களா என்­பது; இரண்டு, சத்­தி­யப் பிர­மா­ணத்­தின்­கீழ் மூன்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பொய் சொன்­னார்­களா என்­பது.

இரண்­டும் உறுதிசெய்­யப்­பட்­டால், பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர்­கள்­மீது, குறிப்­பாக எதிர்க்­கட்­சித் தலை­வர்­மீது மிக­வும் மோச­மா­கப் பிர­தி­ப­லிக்­கும். இரு விவ­கா­ரங்­களும் சரி­யான முறை­யில் கையாளப்­ப­டா­விட்­டால், நாடா­ளு­மன்­றத்தை அவ­ம­தித்து, பெரு­மைக்­குரிய இந்த அமைப்­பின் நன்­ம­திப்­பைக் குலைத்­து­வி­டும்.

சிலர் கேட்­கி­றார்­கள்: "பொய் சொன்­னது திருவாட்டி ரயீசா கான் தானே? பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் ஏன் அதிக கடு­மை­யாக நடத்­தப்­ப­டு­கி­றார்­கள்?"

அவைத் தலை­வர் சற்­று­முன்­னர் குறிப்­பிட்­ட­து­போல், குழு­வின் முடிவு சரி­யாக இருந்­தால், திரு சிங்­கும் சக பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர்­களும் விசா­ர­ணைக் குழு­வி­டம் பொய் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். தங்­க­ளைப் பாது­காத்­துக் கொள்­ள­வும், தங்­க­ளது பங்கை மூடி மறைக்­க­வும், முழுப் பழி­யை­யும் திருவாட்டி கான்மீது சுமத்­த­வும், அவ­ரும் திரு­வாட்டி லோ போன்ற மற்ற சாட்­சி­களும் விசா­ர­ணைக் குழு­வி­டம் பொய் சொன்­ன­தா­கச் சொல்லி, சத்­தி­யப் பிர­மா­ணத்­தின்­கீழ் பொய் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். திருவாட்டி கான் செய்­த­தை­விட இது உண்­மை­யில் மிகக் கடு­மை­யான செயல்.

சத்­தி­யப் பிர­மா­ணத்­தின்­கீழ் பொய் சொன்­ன­தன்­வழி, விசா­ரணைக் குழு­வின் பணிக்கு இடை­யூறு உண்­டாக்கி இருக்­கி­றார்­கள். எந்த ஒழுங்­கீ­னத்தை விசா­ரிப்­ப­தற்­கா­கக் குழு அமைக்­கப்­பட்­டதோ, அதே ஒழுங்­கீ­னத்தை அவர்­கள் வெளிக்­காட்­டி­னார்­கள். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்­மீது எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான திரு சிங்மீது வைக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கைக்கு அவர்­கள் துரோ­கம் இழைத்­து­விட்­டார்­கள். இது உண்­மை­யாக இருந்­தால், மிக­வும் கடு­மை­யான விவ­கா­ர­மா­கும்.

எனவே, நாடா­ளு­மன்­றம் இது­பற்றி என்ன செய்­யப் போகிறது என்­பதை நாடா­ளு­மன்ற உறுப்­பினர்­கள் இப்­போது தீர்­மா­னிக்க வேண்­டும். எது­வுமே நடக்­கா­த­து­போல் நாம் இருந்­து­வி­ட­லாமா? அல்­லது விசா­ர­ணைக் குழு முன்­வைத்த வலு­வான ஆதா­ரங்­க­ளின்­படி அது சாத்­தி­ய­மில்­லா­விட்­டால், நமது தரங்­க­ளைச் சற்றே குறைத்­துக்­கொண்டு, உண்­மைக்­குப் புறம்­பானவை சொல்­லப்­பட்­டி­ருந்­தா­லும் அவ்­வ­ளவு கடு­மை­யான பொய் அல்ல என்­றும் எந்­தத் தீங்­கும் நேர­வில்லை என்­றும் வாதா­ட­லாமா?

இந்த இரண்­டில் ஒன்றை நாம் செய்­தால், நாடா­ளு­மன்­றத்தை அவ­ம­தித்து இழி­வு­ப­டுத்­தும் செய­லுக்கு நாமும் உடந்­தை­யா­கி­வி­டு­வோம். இந்த மீற­லைக் கடு­மை­யான செய­லா­கக் கருதி, நாம் தக்க நட­வடிக்கை எடுக்­க­வேண்­டும். விசா­ரணைக் குழு எடுத்­தி­ருக்­கும் முடி­வும் நாடா­ளு­மன்­றத்­தி­டம் செய்­து இ­ருக்­கும் பரிந்­து­ரை­யும் இது­தான் என்­ப­தில் நான் மகிழ்ச்சி அடை­கிறேன்.

விசா­ர­ணைக் குழு­வுக்கு இருந்த மாற்­றுத் தெரி­வு­கள் என்ன? ஒப்­புக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கும்­படி நாடா­ளு­மன்­றத்­தி­டம் குழு பரிந்­துரைத்­தி­ருக்­க­லாம். ஆனால், அப்­படிச் செய்­தால் கடு­மை­யான ஒரு விவ­கா­ரத்தை நாங்­கள் இலேசாக எடுத்­துக்­கொள்­வ­தா­கக் காட்­டும். அதை­விட மோச­மாக, நமது வழக்­கங்­க­ளின் தரத்­தைக் குறைத்­தால், தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட தலை­வர்­கள் பொய் சொல்­வது அப்­ப­டி­யொன்­றும்

தொடர்ச்சி 7ஆம் பக்கம்...