சிங்கப்பூரில் சனிக்கிழமை புதிதாக 15,836 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்களில் 15,699 பேர் உள்ளூர் மக்கள். 137 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
வெள்ளிக்கிழமை புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 18,094 ஆக இருந்தது.
சனிக்கிழமை நிலவரப்படி 1,491 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். வெள்ளியன்று இந்த எண்ணிக்கை 1,458ஆக இருந்தது.
கொவிட்-19 தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து பதினைந்தாவது நாளாக ஆயிரத்துக்கும் அதிகமாவே இருந்துவருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 182 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 43 பேர் உள்ளனர். கொவிட்-19க்கு மேலும் நால்வர் உயிரிழந்தனர்.
வாராந்திர தொற்று விகிதம் வெள்ளிக்கிழமையிலிருந்து சற்று அதிகரித்து சனிக்கிழமை 1.54ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை அது 1.46ஆக இருந்தது.
தொற்று தலைகாட்டியது முதல் இங்கு கெரோனா கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 567,355 ஆக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

