மோசடிப் பேர்வழிகளிடம் $80,000ஐ பறிகொடுத்த 34 வயது சிங்கப்பூர் மாது அதனால் மனமொடிந்து போகாமல் துணிச்சலுடன் அத்தகைய மோசடிப் பேர்வழிகளுக்கு எதிராக மோசடி எதிர்ப்பு இணையத்தளம் ஒன்றைத் தொடங்கினார்.
இணையத்தில் கைவரிசை காட்டும் தில்லுமுல்லுப் பேர்வழிகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை எடுத்துச் சொல்லி அப்பாவி மக்களை எச்சரிப்பது அந்த இணையத்தளத்தின் நோக்கம்.
அந்த மாது ஏற்படுத்திய 'உலக மோசடி எதிர்ப்பு இயக்கம்' (Gaso) என்ற அமைப்பு உலகம் முழுவதையும் சேர்ந்த 60 பேரைக் கவர்ந்து அவர்களைத் தொண்டூழியர்களாகக் கொண்டு செயல்படுகிறது. அந்த 60 பேரும் மோசடிகளுக்கு இலக்கானவர்கள்.
இந்த இயக்கத்தின் மூலம் இத்தொண்டூழியர்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மக்களைச் சரியான நேரத்தில் தலையிட்டுக் காப்பாற்றி உள்ளனர்.
இல்லை என்றால் அவர்கள் மோசடிப் பேர்வழிகளிடம் சிக்கி மில்லியன் கணக்கான பணத்தை இழந்து இருப்பார்கள்.
மோசடிகளுக்கு இலக்கான பலரிடம் இருந்தும் தகவல்களை எல்லாம் திரட்டி அவற்றை இங்கும் வெளிநாடுகளிலும் செயல்படும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு அந்தத் தொண்டூழியர் குழு கொடுத்து வருகிறது. இதன்மூலம் மோசடிக் கும்பல்களைக் கண்காணிக்க வழி ஏற்படும்.
சிங்கப்பூரிலும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிலும் தளம் கொண்டு செயல்படும் அந்தத் தொண்டூழியர்கள் சொந்த பெயரைப் பயன்படுத்துவதில்லை. போலியான பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்களைக் காத்துக் கொள்கிறார்கள்.
இவ்வேளையில், மோசடிகள் பற்றிக் கருத்துக் கூறிய அந்த சிங்கப்பூர் மாது, மக்களை விவேகமிக்கவர்களாக ஆக்குவதே மோசடிப் பேர்களிடம் இருந்து அவர்களைக் காப்பதற்கான தலைசிறந்த வழி என்று அவர் தெரிவித்தார்.
"புதிய பாணி மோசடி தெரியவரும்போது அதுபற்றி உடனடியாக நாங்கள் ஒவ்வொருவரையும் எச்சரிக்கிறோம். இதன்மூலம் அத்தகைய மோசடிப் பேர்வழிகளை ஒடுக்கிவிடுகிறோம்," என்றாரவர்.
சிங்கப்பூரில் ஏறத்தாழ 50 பேர் இந்த இயக்கத்தின் ஆதரவை நாடி உள்ளனர். அவர்கள் பலதரப்பட்ட முதலீடு தொடர்பான மோசடிகளில் கிட்டத்தட்ட $10 மில்லியனை இழந்து இருக்கிறார்கள்.

