சிங்கப்பூரில் நேற்று பிற்பகலில் பெய்த கடும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்பர் பாய லேபார் ரோட்டுப் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்ததாகவும் அதிக வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் நேற்று பிற்பகல் சுமார் 4.30 மணிக்கு பொதுப் பயனீட்டுக் கழகம் டுவிட்டரில் தெரிவித்தது.
சுவா சூ காங் அவென்யூ 1க்கும் அதே போன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சிங்கப்பூரின் பல இடங்களில் பிற்பகலில் கடும் மழை பெய்யும் என்று முன்னதாக கழகம் தெரிவித்து இருந்தது.
இந்த வாரம் முழுவதுமே மழையை எதிர்பார்க்கலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் முன்னுரைத்து இருக்கிறது.
பொதுப் பயனீட்டுக் கழகம் விடுக்கும் வெள்ளம் தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள twitter.com/PUBSingapore என்ற முகவரிக்குச் செல்லலாம்.

