ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமிப் பரவலைச் சமாளிக்க இந்தோனீசியாவிற்கு உதவும் விதமாக $18.8 மில்லியன் மதிப்புமிக்க மருத்துவக் கருவிகளையும், மருந்துப் பொருள்களையும் சிங்கப்பூர் நேற்று வழங்கியது.
தெமாசெக் அனைத்துலக அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகி பெனடிக்ட் சியோங், 697 செயற்கை சுவாசக் கருவிகளையும், ஒரு மில்லியன் முகக்கவசங்களையும் சிங்கப்பூருக்கான இந்தோனீசியத் தூதர் சூர்யோ பிரதோமோவிடம் வழங்கினார்.
அவற்றில் 418 செயற்கை சுவாசக் கருவிகளும் 600,000 முகக் கவசங்களும் இந்தோனீசிய ராணுவத்திற்கு வழங்கப்பட்டன. எஞ்சியவற்றை மருத்துவமனைகளுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் அந்நாட்டுக் காவல்துறை விநியோகம் செய்யும்.
கிருமிப் பரவலைச் சமாளிக்கப் பல்வேறு தரப்பினரின் கூட்டு முயற்சி தேவை என்றும் அதற்கு எதிரான போராட்டத்தில் சமூகத்தை வலுப்படுத்துவதே முக்கிய அம்சம் என்றும் திரு பெனடிக்ட் கூறியதாக இந்தோனீசியத் தூதரக அறிக்கை தெரிவித்தது.
தெமாசெக் அறநிறுவனம் இந்தோனீசியாவிற்கு வழங்கிவரும் தொடர் ஆதரவுக்குத் தூதர் சூர்யோ பிரதோமோ நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்தோனீசியாவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 48,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது; மேலும் 163 பேர் மாண்டுபோயினர். அந்நாட்டில் மொத்தம் 5.2 மில்லியன் பேர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுவிட்டனர். அதனால் 146,000க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.
கிருமிப்பரவல் தொடங்கியதில் இருந்தே சிங்கப்பூர் பல வழிகளிலும் இந்தோனீசியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருவது குறிப்பிடத்தக்கது.