காவல்துறை தரைப் பிரிவுகளில், போக்குவரத்து காவல் துறையில் ஏறக்குறைய 30 அரசு தரப்பு வழக்கறிஞர்கள் செயல்படுகிறார்கள்
காவல்துறை பிரிவுகளில் அரசாங்க வழக் கறிஞர்களை அமர்த்தும் ஒரு செயல்திட்டம் சென்ற ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண முடிகிறது.
இந்த ஏற்பாட்டின் மூலம், அரசு தரப்பு வழக்கறிஞர்கள், புலன்விசாரணை ஆவணங்களைப் பரிசீலிக்கவும் புலன்விசாரணை அதிகாரிகளிடம் விவரங்களைத் தாக்கல் செய்யவும் ஆகும் நேரம் குறைவதாக அரசாங்க தலைமை வழக்கறிஞர் டான் கியட் பெங் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான வழக்குகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட அளவுக்குக் கூடி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
வழக்குகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படுவதால், சம்பந்தப்பட்ட தரப்புகள் எல்லாவற்றையும் வேகமாக முடித்துக்கொள்ளவும் பதற்றம், பரபரப்பு முன்னதாகவே முடிவுக்கு வரவும் வழி ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் செயல்திட்டத்திற்கு "அரசு வழக்கறிஞர் அலுவலகம்' என்று பெயர்.
தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங் கடந்த ஜனவரியில் சட்ட ஆண்டை தொடங்கி வைத்தபோது இதுபற்றி குறிப்பிட்டு இருந்தார்.
இச்செயல்திட்டம் கடந்த ஜூலையில் தொடங்கப்பட்டது.
இதன்படி ஏழு காவல்துறை தரை பிரிவுகளிலும் போக்குவரத்து காவல்துறை யிலும் ஏறக்குறைய 30 அரசு துணை வழக்கறிஞர்கள் அமர்த்தப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றும் மொத்த வழக்கறிஞர்களில் கிட்டத்தட்ட 15 விழுக்காடாகும். முன்பெல்லாம், காவல்துறை புலன்விசாரணை அதிகாரிகள், தங்கள் புலன்விசாரணை ஆவணங்களைத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பி வந்தனர்.
பிறகு அந்தக் கோப்புகளைப் பரிசீலிக்க வழக்கறிஞர்கள் அமர்த்தப்படுவார்கள்.
அவசர வழக்குகளைப் பொறுத்தவரை புலன்விசாரணையாளர்கள் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று அங்கிருக்கும் துணை வழக்குரைஞருடன் ஆலோசிப்பது வழக்கமாக இருந்து வந்தது.இப்போது இந்த ஏற்பாடு மாறியுள்ளது.

