ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏழு இளையர்களில் நான்கு பேர், கொள்ளை, கலவரம் உட்பட, பிற குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றச்செயல்களை மறைக்க மற்றவர்களுக்கு உதவியதாக கடந்த வெள்ளிக்கிழமை ஏழு பேர் மீதும் தலா ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஐவருக்கு இப்போது 19 வயதாகிறது. ஜோவன் சோ ஜுன் யான், பிரேய்டன் செங் மிங் யான், முகம்மது கைருடின். இதர இரண்டு பேர் குற்றம் புரியும்போது 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்ததால் அவர்களின் பெயர்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
20 வயது லியோங் ஜுன் சியான், 21 வயது லிம் கை ஸீ ஆகியோர் மற்ற இருவர். கைருடின், செங், லிம் ஆகியோர் மீது தலா ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஊழல், போதைப் பொருள் கடத்தல், இதர கடுமையான குற்றங்கள் (சிடிசிஏ) சட்டத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மற்ற நால்வர்களான சோ, லியோங் மற்றும் பெயர் குறிப்பிட முடியாத இரண்டு பதின்ம வயதினர் ஒவ்வொருவரும் சிடிசிஏ சட்டத்தின்படி மூன்று முதல் பத்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். மேலும் அவர்கள் மீது கொள்ளையடித்தல் போன்ற குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன.
பெயர் குறிப்பிட முடியாத 19 வயது இளையர் மீதுதான் ஆக அதிகமாக பத்து குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ளன.
2020, ஜூன் 9ஆம் தேதி, பற்று அட்டையைத் தவறாகப் பயன்படுத்திய முதல் குற்றத்தை அவர் புரிய தொடங்கியபோது அவருக்கு வயது 17தான். கடந்த ஆண்டு மே 17ஆம் தேதி கொவிட்-19 கிருமித்தொற்றுக் காலத்தில் சட்டத்துக்குப் புறம்பாக அந்த இளையர் சிமெய் புளோக்கின் வெற்றுத்தளத்தில் மேலும் மூவரைச் சந்தித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட எழுவரின் வழக்குகளும் இம்மாதம் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அண்மைய ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றிய குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை கைதான 13 பேர் 19 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இதற்கு முன்னதாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கைதான 13 பேரில் ஒன்பது ஆண்களும் நான்கு பெண்களும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மொத்தத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் கடந்த மாதத்திலும் வங்கிக் கணக்கு தொடர்பான மோசடிகளில் சிக்கிய 790 பேர் $13.7 மில்லியனைப் பறிக் கொடுத்துள்ளனர்.

