டெல்டா வகைக் கிருமியைக் காட்டிலும் ஓமிக்ரான் பரவாயில்லை என்றபோதிலும் நாம் உடனடியாக அதனை எண்ணி மகிழவேண்டிய நேரமல்ல இது என்று தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அலுவலக இயக்குநர் துணைப் பேராசிரியர் டேவில் லாய் தெரிவித்துள்ளார்.
“இந்த ஆண்டு அவ்வளவு மோசமானதாக இருக்காது என்று நாம் கருதலாம். ஆனால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆபத்து தொடருகிறது,” என்றார் அவர்.
திங்கட்கிழமை (பிப்ரவரி 21) இரவு இணையம் வழியாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார் அவர். இந்த இரண்டு மணி நேரக் கருத்தரங்கிற்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளி ஏற்பாடு செய்திருந்தது.
“டெல்டாவைக் காட்டிலும் ஓமிக்ரான் ஆபத்து குறைந்த கிருமி என்று நாம் கருதினாலும் மூத்தோரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோரும் நோய்வாய்ப்பட இன்னும் வாய்ப்பு உள்ளது,” என்றார் அவர்.