ஓமிக்ரான் அலையால் தொற்று அதிகரித்து, சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு நெருக்கடியை எதிர்நோக்கும் வேளையில் இங்குள்ள அனைத்து முதலாளிகளும் கொவிட்-19 உறுதி செய்யப்பட்ட தங்களது ஊழியர்களிடமிருந்து மருத்துவச் சான்றிதழைக் கேட்க வேண்டாம் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
தற்போது நடப்பில் உள்ள கொவிட்-19 தொடர்பான சுகாதாரப் விதிமுறைகளை முதலாளிகளும் நிறுவனங்களின் மனிதவளத் துறையும் நன்கு தெரிந்து வைத்திருப்பதுடன், பாதிக்கப்பட்ட நாள்களில் வேலையிடத்திற்குத் திரும்ப ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹேவ்லாக் ரோட்டில் உள்ள மனிதவள அமைச்சின் தலைமையகத்தில் நேற்று அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
தனிமை உத்தரவை நிறைவேற்றிய பின்னர் வேலைக்குத் திரும்பும் ஊழியர்களிடம் மருத்துவரின் மதிப்பீட்டையோ குணமடைந்ததற்கான மருத்துவக் குறிப்பையோ கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்றார் அமைச்சர்.
அதிகாரத்துவ தொற்று ஆவணத்தைப் பெற விரும்பும் சிங்கப்பூரர்கள் கண்காணிப்பின்கீழ் நடத்தப்படும் ஆண்டிஜென் விரைவுப் பரிசோதனைக்கு முன்பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டும்.
இங்கு ஏற்கெனவே செயலில் உள்ள ஏதேனும் ஓர் ஏஆர்டி நிலையத்தில் அவர்கள் அந்தப் பதிவைச் செய்துகொள்ளலாம். அல்லது தீவு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு உள்ள விரைவுப் பரிசோதனை நிலையத்திற்கு அவர்கள் செல்லாம்.
இவற்றில் செய்யப்படும் பரிசோதனைகளுக்கு மார்ச் 15 முதல் அரசாங்கம் முழுமையாக நிதியளிக்கும். பரிசோதனை செய்துகொண்ட 30 நிமிடங்களுக்குள் அவர்களின் 'ஹெல்த்ஹப்' செயலியில் பரிசோதனை முடிவு பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும்.
பரிசோதனை நிலையங்களில் கண்காணிப்பின்கீழ் நடத்தப்படும் ஏஆர்டி பரிசோதனையை மேற்கொள்வோரின் கைபேசிக்கு குறுந் தகவல் வாயிலாகவும் முடிவு அறிவிக்கப்படும். நோய் தொற்றியதற்கான சான்றாக அவர்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதனை விளக்கிய டாக்டர் டான், இப்போதைய நிலையில் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பு நெருக்கடிக்கு ஆளாவதை உணரமுடிவதாகவும் குறிப்பாக பொது மருத்துவர்களின் மருந்தகங்கள், பலதுறை மருந்தகங்கள் மற்றும் அவசரகால மருத்துவத் துறைகள் போன்றவற்றில் நெருக்கடி நன்றாக உணரப்படுவதாகவும் கூறினார்.
"தங்களை நாடி வரும் பெரும்பாலான நோயாளிகளிடம் இலேசான அறிகுறிகள் காணப்படுகின்றன அல்லது அறிகுறிகளே காணப் படுவதில்லை என பொது மருத்துவர்களும் அவசரகால மருத்துவத் துறையினரும் கூறுகிறார்கள்.
"இந்த நிலையில் மருத்துவச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக மட்டும் பல நோயாளிகள் வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வேலையிடத்தில் அவசியம் காட்டவேண்டும் என்பதற்காக அவர்கள் அச்சான்றிதழைப் பெற மருத்துவர்களை நாடுகிறார்கள். இது தேவையற்றது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்," என்றார் டாக்டர் டான். மருந்தகங்கள் முன்பு நீண்ட வரிசை காணப்படுவதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து தாம் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொள்வதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்து

