ஏற்றத்தாழ்வைச் சமாளிப்பது என்பது தொடரும் முன்னுரிமை: இந்திராணி
படிப்படியாக உயர்த்தப்படக்கூடிய வரிவிதிப்புக் கட்டமைப்பை சிங்கப்பூர் அரசாங்கம் பெற்றிருப்பதாக பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டமும் கடந்தகால அனுபவத்தின் அடிப்படையில் உருவாவதாக நேற்று 'மணி எஃப்எம் 89.3' வானொலியில் நடைபெற்ற விவாதத்தின்போது அவர் கூறினார். "முன்னோக்கிச் செல்வதும் ஏற்றத்தாழ்வைச் சமாளிப்பதும் நமது முன்னுரிமைப் பட்டியலில் ஆக அவசியமானதாகத் தொடரும்," என்றார் அவர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், அதிகம் சம்பாதிப்பவர்கள் அதிக வரிசெலுத்தும் வகையில் சில வரிகளை உயர்த்தி அறிவித்தார். தனிநபர் வருமானம், வசிப்பிடச் சொத்துகள் மற்றும் ஆடம்பர கார்கள் ஆகிய வற்றுக்கான வரிகள் அவர்களை இலக்காகக் கொண்டு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா 17 நகரமன்றங்களும் முழுமையான நிதிநிலை அறிக்கை
எல்லா 17 நகரமன்றங்களும் முழுமையான நிதிநிலையை 2020 நிதி ஆண்டில் தாக்கல் செய்திருந்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சு கூறியுள்ளது. ஒவ்வொரு நகரமன்றத்தின் நிதி விவகாரமும் எல்லா வகையிலும் நியாயமாக தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கணக்குத் தணிக்கையாளர்கள் தீர்மானித்திருப்பதையே இது குறிக்கிறது. இருப்பினும், ஆறு நகரமன்றங்கள் சில நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டின. அல்ஜுனிட்-ஹவ்காங் நகரமன்றமும் செங்காங் நகரமன்ற மும் முக்கிய அதிகாரிகளை மாற்றியது குறித்து 30 நாள் களுக்குள் தேசிய வளர்ச்சி அமைச்சிடம் தெரிவிக்கத் தவறி யதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் முக்கிய நியமனங்கள் குறித்த அறிவிப்பை 30 நாள்களுக்கு வெளியிட செங்காங் நகரமன்றம் தவறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 2020 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நகரமன்ற உறுப்பினர்கள், குழுக்களில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றதாகவும் இது தொடர்பான பெரும்பாலான தகவல்கள் குறித்த காலத்துக்குள் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அல்ஜுனிட்-ஹவ்காங் நகரமன்றம் கூறியிருந்தது.
ஓமிக்ரான் சாதாரணமானது என்று எண்ணி மகிழ்ந்துவிடக்கூடாது
டெல்டா வகைக் கிருமியைக் காட்டிலும் ஓமிக்ரான் பரவாயில்லை என்றபோதிலும் நாம் உடனடியாக அதனை எண்ணி மகிழவேண்டிய நேரமல்ல இது என்று தேசிய தொற்று நோய்த் தடுப்பு நிலையத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அலுவலக இயக்குநர் துணைப் பேராசிரியர் டேவிட் லாய் தெரிவித்துள்ளார். "இந்த ஆண்டு அவ்வளவு மோசமானதாக இருக்காது என்று நாம் கருதலாம். ஆனால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆபத்து தொடருகிறது," என்றார் அவர். திங்கட்கிழமை இரவு இணையம் வழியாக நடத்தப்பட்ட கருத்தரங்கில்
பங்கேற்றுப் பேசினார். "டெல்டாவைக் காட்டிலும் ஓமிக்ரான் ஆபத்து குறைந்த கிருமி என்று நாம் கருதினாலும் மூத்தோரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோரும் நோய்வாய்ப்பட இன்னும் வாய்ப்புள்ளது," என்றார் அவர்.

