சுகாதார அமைச்சின் தரவு நிர்வாகப் பிரிவின் துணைத் தலைவராக இருந்த சாவ் செங்கிற்கு 18 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கையை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே 'வீசேட்' குறுந்தகவல் செயலியில் தான் உட்பட 50 பேர் இருந்த குழுவிற்கு இவர் அனுப்பியிருக்கிறார்.
மேலும், தகவலை வெளியிடுவதற்கு முன்னர் சரியான கிருமித்தொற்று சம்பவ எண்ணிக்கையை முன்வைக்கும் போட்டியைக் கொண்ட விளையாட்டிலும் குழுவில் இருந்தவர்களுடன் சாவ் ஈடுபட்டிருக்கிறார். ஏறக்குறைய சரியான எண்ணிக்கையைத் தெரிவிப்பவரை இவர் பாராட்டியிருக்கிறார். சிலருக்கு வெகுமானமாக ஒரு யுவான் (20 சிங்கப்பூர் காசு) தொகையையும் வழங்கியிருக்கிறார்.
37 வயது சாவ், அரசாங்க ரகசிய சட்டத்தின்கீழ் தன் மீது சுமத்தப்பட்டிருந்த 11 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரரான இவர், கணினியின் தவறான பயன்பாட்டுக்கான சட்டத்தின்கீழ் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.
இதே 'வீசேட்' குழுவிலிருந்த மற்றொருவரான 36 வயது டேங் லின்னுக்குச் சென்ற ஆண்டு $10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அரசாங்க ரகசிய சட்டத்தின்கீழ் தன் மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
சாவ் தற்போது தங்களிடம் வேலை செய்யவில்லை என்று சுகாதர அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறை விசாரணையைத் தொடங்கிவிட்டதாக சுகாதார அமைச்சுக்குத் தகவல் வந்தது. அமைச்சின் ரகசிய தகவல்களைத் தெரிந்துகொள்ள சாவிற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரமும் மீட்டுக்கொள்ளப்பட்டது. இவற்றுக்குப் பிறகு 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
"இச்சம்பவத்திற்குப் பிறகு சுகாதார அமைச்சு அதன் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளையும் செயல்முறைகளையும் மறுபரிசீலனை செய்து முடுக்கிவிட்டுள்ளது," என்றும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

