சிங்கப்பூர் வாசகர்கள், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், தாங்கள் வாசிக்கும் செய்திகளில் உள்ள தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கக் கூடுதல் நேரம் செலவிடுவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கொள்கை ஆய்வுக் கழகம் சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்கள் 50 பேரிடம் அந்த ஆய்வை நடத்தியது.
5ஜி தொழில்நுட்பம், பறவைகளின் உயிருக்கு ஆபத்தானதா என்பது குறித்த தவறான தகவல்களைக் கொண்ட இணையக் கட்டுரையை வாசிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பகுத்தறியும் பண்புடன் அவர்கள், எவ்வாறு அந்தத் தகவல்களைச் சரிபார்த்தனர் என்பது ஆய்வில் கருத்தில் கொள்ளப்பட்டது.
அதிகாரபூர்வ தளங்களில் இருந்து பெறும் தகவலுக்கும், சமூக வட்டங்களில் இருந்து கிடைக்கும் தகவலுக்கும் இடையே அவர்கள் எந்த அளவிற்கு வலுவாகப் பாகுபடுத்திப் புரிந்துகொள்கின்றனர் என்று ஆராயப்பட்டது.
தொடர்பு, தகவல் அமைச்சின் நிதியாதரவுடன் அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
தவறான தகவல் யாரை வேண்டுமானாலும் சென்றடையக்கூடும்; அதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதைச் சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்; இருப்பினும், பொய்ச் செய்திகளுக்கு எதிரான போராட்டத்தில் அனைவருக்கும் பங்குண்டு என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
'ஸ்னோப்ஸ்' போன்ற தகவல்-சரிபார்ப்பு இணையத்தளங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல், சமூக வட்டங்களில் பரவும் பொய்ச் செய்திகளைத் திருத்துவதற்குரிய திறன்களைப் பொதுமக்களுக்குக் கற்பித்தல் உள்ளிட்ட சில பரிந்துரைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

