சுகாதாரப் பராமரிப்பாளரின் சவால்கள் குறித்து தொழிற்சங்கம்

2 mins read
9b8364e9-76b9-4bac-a85c-25ce9603909b
தெம்பனிஸில் உள்ள ஒரு மருந்தகத்தில் சிகிச்சை பெற காத்திருக்கும் நோயாளிகள்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சளிக்­காய்ச்­சல் அதி­கம் பர­வு­வது, சக ஊழி­யர்­கள் வேலை­யி­லி­ருந்து வில­கு­வது, ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்­குக் கூடு­த­லா­னோர் ஆளா­வது, போது­மான ஓய்வு இல்­லா­தது ஆகிய கார­ணங்­க­ளால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் அதிக நெருக்­கு­த­லுக்கு ஆளா­வ­தாக இத்­து­றை­யின் ஊழி­ய­ர­ணித் தலை­வர் திரு­வாட்டி தன­லெட்­சுமி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் தெரி­வித்­தார்.

மோச­மான சுவா­சக் குழாய் பிரச்­சி­னைக்கு ஆளா­கும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள், தங்­க­ளின் சாதா­ரண மருத்­துவ விடுப்­பிற்­குப் பதி­லாக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்­கான விடுப்பை இப்­போது பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம் என்ற தக­வல் ஒரு நற்­செய்தி என்று சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சேவை ஊழி­ய­ர­ணி­யின் தலை­வ­ரான திரு­வாட்டி தன­லெட்­சுமி கூறி­யுள்­ளார்.

மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்­கான விடுப்பு தொடர்­பி­லான கோரிக்­கையை இந்த ஊழி­ய­ர­ணி­தான் முன்­வைத்­திருந்தது.

போது­மான மருத்­துவ விடுப்பு நாள்­கள் இல்­லா­மல் போனால் சுகா­தாரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் சம்­ப­ளமின்றி விடுப்­பில் செல்­வ­தைத் தவிர்க்க இந்தக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

வரும் நாள்­களில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் மருத்­து­வ­மனை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தற்­கான விடுப்பை மருத்­துவ விடுப்­பா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம் என்று கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று பொது மருத்­து­வ­ம­னை­கள், பல­துறை மருந்­த­கங்­கள் ஆகி­ய­வற்­றில் வேலை செய்­யும் ஊழி­யர்­க­ளுக்­கான குறிப்­பில் சுகா­தார அமைச்­சர் ஓங் யீ காங் தெரி­வித்­தி­ருந்­தார்.

இத­னால் மூன்று பொதுச் சுகா­தா­ரப் பிரி­வு­க­ளைச் சேர்ந்த சுமார் 70,000 சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் பல­ன­டை­வர்.

இந்த ஏற்­பாடு அப்­போ­தைய கொவிட்-19 நில­வ­ரத்­தைக் கருத்­தில்­கொண்டு அடுத்த மாதம் மறு­பரி­சீ­லனை செய்­யப்­படும்.

"நமக்­குப் பெரிய அள­வில் ஊழி­யர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. ஓமி­க்­ரா­னால் ஊழி­யர்­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது, அவர்­க­ளின் பிள்­ளை­கள், அன்­புக்­கு­ரி­ய­வர்­கள் ஆகி­யோ­ரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளைக் கவ­னித்­துக்­கொள்ள ஊழி­யர்­க­ளுக்­கு நேரம் தேவைப்­படு­கிறது. மேலும், இது சளிக்­காய்ச்­சல் பர­வும் பரு­வ­மும்­கூட," என்று திரு­வாட்டி தன­லெட்­சுமி சுட்­டி­னார்.

ஓய்வு நாள்­க­ளி­லும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் வேலைக்கு அழைக்­கப்­படுகின்றனர். அத­னால் அவர்­க­ளுக்­குப் போது­மான ஓய்வு இல்லை. மேலும், வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்த பல சுகா­தா­ரப் பரா­மரிப்பு ஊழி­யர்­கள் வேலை­யி­லிருந்து வில­கி­யதா­க­வும் திரு­வாட்டி தன­லெட்­சுமி சொன்­னார்.

சென்ற ஆண்டு முற்­பா­தி­யில் கிட்­டத்­தட்ட 1,500 சுகா­தா­ரப் பரா­மரிப்பு ஊழி­யர்­கள் வேலை­யி­லிருந்து வில­கி­ய­தா­கக் கடந்த நவம்­பர் மாதம் வெளி­யி­டப்­பட்ட அர­சாங்கப் புள்ளி விவ­ரங்­கள் தெரி­வித்­தன.

கொள்­ளை­நோய்ப் பர­வலுக்கு முந்­தைய கால­கட்­டத்­தில் ஆண்­டு­தோ­றும் சுமார் 2,000 ஊழி­யர்­கள் வேலை­யி­லி­ருந்து வில­கினர்.

சென்ற ஆண்டு முற்பாதியில் வேலையிலிருந்து விலகியோரில் வெளிநாடுகளிலிருந்து வந்த சுமார் 500 மருத்துவர்களும் தாதியரும் அடங்குவர்.

2020ஆம் ஆண்டு முழு­வ­துமே இத்­து­றை­யில் இத்­தனை வெளி­நாட்டு ஊழி­யர்­கள்­தான் வேலை­யி­லி­ருந்து வில­கி­னர்.

2019ஆம் ஆண்டு இந்த எண்­ணிக்கை 600ஆக பதி­வா­னது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான ஊழி­யர்­க­ளி­டம் சில முத­லா­ளி­கள் இன்­ன­மும் மருத்­து­வச் சான்­றிதழ்­க­ளைத் தரு­மாறு கேட்­கின்­ற­னர்.

அத்­த­கைய ஊழி­யர்­களாலும் மோச­மாக நோய்­வாய்ப்­படா­தோர் போன்றோராலும் மருத்­து­வ­ம­னை­களும் மருந்­த­கங்­களும் சிர­மப்­படுகின்­றன.