சிங்கப்பூரில் புதிய வகை மோசடி தலைதூக்கி இருக்கிறது.
குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் சிங்கப்பூர் கியூஆர் குறியீடுகளைத் தங்கள் சிங்பாஸ் செயலி மூலம் பயன்படுத்தும்படி செய்து மக்களை மோசடிக்காரர்கள் தங்கள் வலையில் சிக்க வைக்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள்.
அப்படி செய்வதன் மூலம் அப்பாவிகள் பெயரில் புதிய நிறுவனத்தைப் பதிந்து அல்லது புதிய கைபேசி எண்களை வாங்கி அல்லது புதிய வங்கிக் கணக்குகளைத் திறந்து மோசடிக்காரர்கள் கைவரிசைக் காட்டுகிறார்கள்.
அந்தப் பதிவுகள் சட்டவிரோதமான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.
குறுஞ்செய்தி மூலமாக, வாட்ஸ்அப் மூலமாக அனுப்பப்படும் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவற்றுடன் இணைந்திருக்கும் இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தி இருக்கிறது.
பரிவர்த்தனைகளின்போது அல்லது கடைகளில் பணம் செலுத் தும் முகப்புகளில் கியூஆர் குறியீட்டை பயன்படுத்தும்போது அது தானாகவே படித்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
கியூஆர் குறியீடு மோசடிப் பேர்வழிகள் முதலில் பணம் கிடைக்கும் என்று உறுதி கொடுப்பார்கள்.
கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தச் சொல்வார்கள். பிறகு அங்கீகாரம் இல்லாமல் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவார்கள்.
அந்தப் பரிவர்த்தனைகள் பற்றி கைபேசியில் செய்தி வந்த பிறகுதான் அப்பாவிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்வார்கள்.
ஆகையால், மக்கள் மிகவும் எச்சரிக்கையுன் விழிப்புடன் இருந்து கொள்ளவேண்டும்.

