அதிகளவில் சுத்தமான எரிசக்தியை உருவாக்கும் நோக்கில் 2025ன் மூன்றாம் காலாண்டுக்குள் மேலும் 1,290 வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடிக் கட்டடங்களில் சூரிய மின்தகடுகள் பொருத்தப்படும்.
பீஷான்-தோ பாயோ, தஞ்சோங் பகார் மற்றும் ஜூரோங்-கிளமெண்டி நகர மன்றங்களின்கீழ் அடங்கிய வீவக கட்டடங்களில் மின்தகடுகள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிங்கப்பூரில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட வீவக கட்டடங்களில் மொத்தம் 8,400 கட்டடங்களில் சூரிய மின்தகடுகள் இருக்கும் என்று வீவக நேற்று குறிப்பிட்டது.
அரசாங்கத் தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி, இனி திறக்கவுள்ள கத்திப் பலதுறை மருந்தகம் என மேலும் 99 இடங்களில் இந்தச் சூரிய மின்தகடுகள் பொருத்தப்படும் என்று அறியப்படுகிறது.
வீவகவுடன் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் முன்னெடுக்கும் புதிய திட்டம் இது.
வீவக வட்டாரங்களில் அமைந்துள்ள மின்தூக்கிகள், விளக்குகள், தண்ணீர்க் குழாய்கள் போன்ற பொது வசதிகளை இயக்க, தகடுகள் வழி சூரிய எரிசக்தி செலுத்தப்படும்.
இதன் தொடர்பில் தனது ஏழாவது ஏலக்குத்தகையைத் துவக்கி வைத்திருப்பதாக வீவக தெரிவித்தது.
மேற்குறிப்பிட்ட 8.400 வீவக கட்டடங்களுக்கும் வழங்கப்படவுள்ள மொத்த சூரிய மின் ஆற்றல், கிட்டத்தட்ட 95,000 நான்கறை வீவக வீடுகளுக்குச் சூரிய எரிசக்தி வழங்குவதற்குச் சமம் என்று கூறப்பட்டது.
சூரிய மின் ஆற்றல் தொடர்பில் தான் 2019ல் வகுத்த இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் திட்டமிட்டபடி அடையும் என்றும் வீவக தெரிவித்துள்ளது. ஏலக்குத்தகைக்கான இறுதி நாள் மே 20 என்று தெரிவிக்கப்பட்டது.
இதுவரை 2,700 வீவக கட்டடங்களில் சூரிய மின்தகடுகளைப் பொருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் எஞ்சிய கட்டடங்களில் தகடுகளைப் பொருத்தும் பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.