பறவைகள், பாம்புகள், புனுகுப் பூனைகள் உள்பட காயமடைந்த வனவிலங்குகளை மீட்டு அவற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் புதிய நிலையத்தை தேசிய பூங்காக் கழகம் லிம் சூ காங் வட்டாரத்தில் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தது.
வனவிலங்கு மறுவாழ்வுக்கென இயங்கும் இந்த 1,250 சதுர மீட்டர் நிலையத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. அறுவை சிகிச்சைக்கான அறைகள், அடை காக்கும் கருவி, பிராணவாயுக் கூண்டு, ஊடுகதிர் இயந்திரங்கள் போன்றவற்றுடன் குணமடைந்துவரும் விலங்கினங்களுக்கான உள்புற, வெளிப்புற வேலி அடைப்புகளும் இந்த நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது வனவிலங்கு மீட்பு மற்றும் சிகிச்சை தொடர்பில் பங்காளிகளாக விளங்கும் 'ஏக்கர்ஸ்', மண்டாய் வனவிலங்குக் குழுமம் ஆகியவற்றுடன் இனி இந்தப் புதிய நிலையமும் செயல்படும் என்று கழகம் நேற்று அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
புதிய நிலையத்தை நேற்று தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் பார்வையிட்டார். சிங்கப்பூரில் வனவிலங்கு மறுவாழ்வுக்கும் பராமரிப்புக்கும் புதிய நிலையம் துணைபுரியும் என்றும் பாதுகாப்பு முயற்சிகளுக்குக் கூடுதல் உதவியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2,000 வனவிலங்குகளைக் கழகம் மீட்டதாகக் கூறப்பட்டது. மீட்கப்பட்ட விலங்கினங்களில் கைவிடப்பட்ட அல்லது காயமடைந்த விலங்குகள் அடங்கும் என்று கூறப்பட்டது.
சாலை விபத்துகளில் சிக்குதல், கட்டடங்களில் மோதுதல், நகர்ப்புற இடங்களுக்குள் தவறுதலாக வருதல் போன்ற காரணங்களால் விலங்குகளுக்கு இந்நிலை நேர்ந்ததாக அறியப்படுகிறது.
மீட்கப்பட்ட விலங்கினங்களில் கிட்டத்தட்ட 130 விலங்குகளுக்குக் கூடுதல் மதிப்பீடும் சிகிச்சையும் செய்ய நேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
லிம் சூ காங் வட்டாரத்தில் உள்ள விலங்கு, செடி சுகாதார நிலையத்தின் வளாகத்தில்தான் புதிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மறுவாழ்வு காலகட்டத்தின்போது விலங்குகளுக்கு இடமளிக்கப்பட்டு, உணவு அளிக்கப்பட்டு, பராமரிப்பும் வழங்கப்படும். ஆனால், மனிதத் தொடர்பு அவற்றுக்குப் பழகிவிடாதபடி இந்தப் பராமரிப்பு அளிக்கப்படும்.
ஆமைகளுக்குக் குளங்கள், தவளைகளுக்குத் தொட்டிகள், குரங்குகள் ஏறி இறங்குவதற்குக் கட்டமைப்புகள் எனப் பலதரப்பட்ட இடவசதிகள் புதிய நிலையத்தில் செய்துத் தரப்பட்டுள்ளன.
வனவிலங்குகளைச் செல்லப்பிராணிகளாக வைத்திருக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.