சிங்கப்பூரின் முதல் அறிவார்ந்த தீயணைப்பு நிலையம் பொங்கோலில் அதிகாரபூர்வைமாகத் திறக்கப்பட்டுள்ளது. நேற்று திறக்கப்பட்ட இந்நிலையத்தில் அறிவார்ந்த வகுப்பறைகள், தானியக்க மருத்துவ வசதி போன்ற அம்சங்கள் அமைந்துள்ளன.
தீயணைப்பு நிலையங்களில் பொதுவாக காணப்படும் தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ உதவி வாகனங்கள் உள்ளிட்டவையும் இந்நிலையத்தில் இருக்கின்றன.
புதிய அக்கம்பக்கத்து காவல்துறை நிலையத்துடன் இணைந்து இந்த தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதர நிலையங்களிலும் செயல்படுத்தும் நோக்குடன் இங்குள்ள பல புதிய அம்சங்களும் தொழில்நுட்ப முறைகளும் எவ்வளவு ஆக்கபூர்வமாக இருக்கின்றன என்பது பயன்படுத்திப் பார்க்கப்படும்.
உள்துறைக் குழுவை ஒன்றிணைக்கும் இலக்கு உள்ளது என்றும் அதைக் கருத்தில்கொண்டே பொங்கோல் அக்கம்பக்கத்து காவல்துறை நிலையமும் பொங்கோல் தீயணைப்பு நிலையமும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறினார். மேலும், ஆக்கபூர்வமாக இயங்குவதற்கும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் தோதாக இரு குழுவினரும் தங்களிடையே இருக்கும் வளங்களைப் பகிர்ந்துகொள்ள இந்த ஏற்பாடு வகைசெய்யும் என்றார் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ.
"நிலைமை சவாலாகி வருவதால் வளங்களை முடிந்தவரை நன்கு பயன்படுத்திக்கொள்ள அனைவரையும் உள்ளடக்கும் ஒன்றுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றி உள்துறை அமைச்சின் குழுக்கள் இணைந்து செயல்படவேண்டும்," என்று அறிவார்ந்த தீயணைப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் சொன்னார்.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இந்நிலையம் இயங்கிவருகிறது. 11 அவசர சேவை வாகனங்கள், இரண்டு தீயணைப்பு வாகனங்கள், நான்கு மருத்துவ உதவி வாகனங்கள் உள்ளிட்டவை இந்நிலையத்தில் இருக்கின்றன.

