மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 244 பேர் குறித்து சிங்கப்பூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் மோசடிச் சம்பவங்களில் சிக்கியவர்கள் மொத்தம் 4.3 மில்லியன் வெள்ளிக்கும் மேலான தொகையை இழந்துள்ளனர்.
இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து நேற்று முன்தினம் வரை சிங்கப்பூர் முழுவதும் நடத்திய சோதனையில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டதாகக் காவல்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
சந்தேக நபர்கள் 15லிருந்து 77 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் 167 ஆண்களும் 77 பெண்களும் அடங்குவர்.
மோசடிகளில் ஈடுபட்டதாகவும் பணத்தை சட்டவிரோதமாகக் கடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் சந்தேகிக்கப்படும் இவர்கள் தற்போது காவல்துறை விசாரணைக்கு உதவி வருகின்றனர்.
510க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இணையக் காதல் மோசடிகள், மின்வர்த்தக மோசடிகள், முதலீட்டு மோசடிகள் அதிகாரிகளைப் போல் நடித்து ஏமாற்றும் மோசடிகள் உள்ளிட்டவவை அவற்றில் அடங்கும்.
காவல்துறை அண்மையில் வெளியிட்ட குற்றச் செயல் புள்ளி விவரங்களில் சென்ற ஆண்டு மோசடிச் சம்பவங்களில் சிக்கியவர்கள் மொத்தம் 633 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறிகொடுத்தது தெரியவந்தது. இந்தத் தொகை, அதற்கு முந்தைய ஆண்டு பறிபோன தொகையில் இரண்டு மடங்கிற்கும் அதிகம்.
சந்தேக நபர்கள் புரிந்ததாகச் சொல்லப்படும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுச் சிறைத் தண்டனையும் 500,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.
மோசடிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள scamalert.sg என்ற இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-722-688 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

