கொவிட்-19 தொற்று காரணமாக ஒடுங்கிப்போய்ஒன்றும் தெரியாமல் தவிக்கும் உலகம் ஓரளவு மீண்டு வரும் நேரத்தில் திடீரென்று அதைவிட பெரும் பூதமாக ஐரோப்பாவில் போராயுதம் வெடிக்கத் தொடங்கி, போர் சத்தம் கிளம்பிவிட்டது.
உலகப் பொருளியல் இன்னமும் நிமிர்ந்து நிற்க வில்லை. எப்படி தலை தூக்குவது என்பது புரியாமல் உலகமும் அதன் ஒரு பகுதியான ஐரோப்பாவும் மெல்லமெல்ல மீட்சிப் பாதைக்குத் திரும்புகின்றன.
இந்த நிலையில் யாருமே ஏற்றுக்கொள்ள முடியாதபடி ரஷ்ய அதிபர் புட்டின் பக்கத்தில் இருக்கும் உக்ரேன் மீது போர் தொடுத்து ஐரோப்பாவின் அமைதியைக் கெடுத்துவிட்டார்.
எல்லைப் பகுதிகள், யாருக்குச் செல்வாக்கு போன்ற பழைய பத்தாம்பசலி காரணங்களை முன் வைத்து புட்டின் கிளப்பி இருக்கும் இந்தப் போர் எப்படி, எங்கு, எவ்விதம் முடியப்போகிறது என்பது தெரியாமல் உலக நாடுகள் மேலும் ஓர் அச்சத்தை, புதிதாக ஒரு மிரட்டலை கண்டு நடுங்கத் தொடங்கி இருக்கின்றன.
உலகப் போருக்குப் பிறகு இது நாள்வரை அமைதி யாக இருந்து வந்த ஐரோப்பாவின் நிம்மதியைக் கெடுத்து தனது பழைய சோவியத் யூனியன் சித்தாந்தத்துக்கு ஆதரவாக புட்டின் கையில் எடுத்து இருக்கும் போராயுதம் ஐரோப்பாவை மட்டுமின்றி உலகை என்ன கதிக்கு ஆளாக்கப்போகிறதோ என்பதைக் கணிக்க இப்போதைக்கு இயலவில்லை.
அதிபர் புட்டின் எடுத்துள்ள போர் முடிவைப் போல அதே முடிவை எடுக்கும் நிலையில் ஐரோப்பிய கூட்டணி இல்லை. அப்படி ஐரோப்பிய கூட்டணியும் களத்தில் குதித்தால் ஐரோப்பிய கண்டத்திலும் உலகிலும் யாருமே விரும்பாத வேண்டாத விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்பதிலும் ஐயமில்லை.
இப்படிப்பட்ட ஒரு சூழல் ஏற்படுவதைத் தடுக்க, தவிர்க்கவே ஐரோப்பியக் கூட்டணி நாடுகளும் அதன் ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் விரும்புகின்றன என்பதை ரஷ்ய அதிபர் புட்டின் உணர்ந்துகொண்டுதான் உக்ரேன் ஆக்கிரமிப்புச் செயலை அரங்கேற்றி இருப்பார்.
சோவியத் யூனியன் இருந்தபோது அதன் ஒரு பகுதியாக உக்ரேன் இருந்தது. பிறகு உக்ரேன் தனி நாடாக பிரிந்தது. என்றாலும்கூட உக்ரேனில் வேண்டாத விஷம வேலைகளை அப்போதைக்கு அப்போது செய்தபடியேதான் ரஷ்ய அதிபர் புட்டின் இருந்து வந்தார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரேன், மேற்கு ஐரோப்பா நாடுகளின் சுதந்திரத்தை, பாதுகாப்பை உறுதிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட நேட்டோ என்ற அமைப்பில் சேரக்கூடாது; உக்ரேன் நடுநிலையான நாடாக இருக்கவேண்டும்; அதாவது அந்நாட்டில் ராணுவ சக்தி அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அந்தச் சாக்கில் அதிபர் புட்டின் உக்ரேன் மண்ணில் மூன்று திசைகளில் இருந்தும் உள்ளே நுழைந்திருக்கிறார்.
உயிர் பலி, பொருட்சேதத்தை ஏற்படுத்தி வருகிறார். புட்டினின் இந்த அடாவடிச் செயலை, உலக நாடுகள் மட்டுமின்றி ரஷ்ய மக்களேகூட எதிர்க்கிறார்கள். உக்ரேன் மீது படை தொடுக்கும் படுபாதகச் செயலை செய்ய வேண்டாம்; அப்படி போர் தொடுத்தால் இந்த நூற்றாண்டிலேயே ஆகமோசமாகிவிடக்கூடிய அந்தப் போர் காரணமாக உலகிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பேரழிவாக இருக்கும் என்று தொடக்கத்திலேயே ஐநா தலைமைச் செயலாளர் ஆண்டனி குட்டரஸ், அதிபர் புட்டினை எச்சரித்து இருந்தார்.
அதுவும் கொவிட்-19 காரணமாக படுபாதாளத்தில் விழுந்துவிட்ட உலகமும் வளர்ந்த நாடுகளும் முழு மீட்சி அடைய காலஅவகாசம் தேவை. ஆகையால் இந்த நேரத்தில் போர் தொடுப்பது இன்னும் மோச மான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எடுத்துக்கூறி இருந்தார்.
போர் காரணமாக எண்ணெய் விலை மேலும் உயர்ந்துவிடும்; உக்ரேனின் கோதுமை ஏற்றுமதி தடைபடும்; வட்டி விகிதம் உயரும். இதனால் உலக சந்தைகள் ஆட்டம் காணும் என்றெல்லாம்கூட அவர் தெரிவித்து இருந்தார். இவை எல்லாமே ரஷ்யாவையும் பாதிக்கும் என்றாலும் அதைப் பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் ரஷ்ய அதிபர் போராயுதங்களை கையில் எடுத்துவிட்டார்.
ரஷ்யாவின் இந்த முடிவை சிங்கப்பூரும் கடுமையாகக் கண்டித்தது. உக்ரேன் நாட்டின் இறை யாண்மையையும் சுதந்திரமும் எல்லைகளும் மதிக்கப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் வலியுறுத்தியது.
உடனடியாக ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடும் என்று சிங்கப்பூர் நம்பிக்கை தெரிவித்தது. ஐநா சாசனத்தின்படியும் அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்பவும் அமைதியான முறையில் ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்றும் சிங்கப்பூர் வலியுறுத்தியது. ரஷ்யா போர் தொடுப்பதற்கு முன்பாகவே அதைக் கணித்த அமெரிக்கா, உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பல பொருளியல் தடைகளை அமல்படுத்தின.
ஐரோப்பாவில் இருக்கும் அதிபர் புட்டினின் சொந்த சொத்துகளையும் ஐரோப்பிய ஒன்றியம் முடக்கிவிட்டது. அனைத்துலக சமூகம் நடைமுறைப்படுத்திவரும் அத்தகைய கடுமையான பொருளியல், நிதித் தடைகள் விளைவுகளை ஏற்படுத்த கொஞ்சம் காலம் பிடிக்கலாம். அதனால் ரஷ்யா தன்னுடைய போர் நடவடிக்கைகளின் வேகத்தைக் குறைத்துக்கொள்ளும் சூழ்நிலைகூட வரலாம்.
இருந்தாலும் ரஷ்யாவைக் கட்டுப்படுத்த இதுவரை விதிக்கப்பட்டுள்ள தடைகள் மட்டுமே போதாது. ரஷ்யாவின் நாணயம், சந்தைகள், கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த சொத்துகள், பொருளியல் அனைத்தையும் செம்மையாகப் பாதிக்கக்கூடிய மேலும் தண்டனைகள் இடம்பெற வேண்டும் என்பது அவசர அவசியமாகி இருக்கிறது.
உலக நாடுகள் உக்ரேனில் நேரடியாக படைபலத்தை இறக்கி அந்த நாட்டுக்கு உதவி ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த முயல்வது விவேகமாக இருக்காது.
இத்தகைய ஒரு நிலையில், போர் மதம் பிடித்த, யானை போன்ற பலம் கொண்ட ரஷ்யாவை சொந்தமாக எதிர்த்து நின்று தன் எல்லைகளைத் தற்காத்துக்கொள்ள தன்னால் முடிந்த ஆன அனைத்தையும் செய்து உக்ரேன் போராடி வருகிறது.
அதிபர் புட்டின் வேறு ஒரு நாட்டின் இறை யாண்மை உரிமையை மீறி செயல்படுகிறார். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல். இதை ரஷ்யா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு ஏதுவாக, ரஷ்யாவின் சக்தி வாய்ந்த நட்பு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் உக்ரேன் போரைத் தடுத்து நிறுத்த முயல வேண்டும்.
அதோடு மட்டுமின்றி, உக்ரேனுக்கு பொருளியல் ரீதியிலும் நிதி ரீதியிலும் உதவ அவை முன்வர வேண்டும்.

