சிங்கப்பூருக்கான இந்திய ஏற்றுமதி 2021ல் 31 விழுக்காடு அதிகரித்தது. குறிப்பாக பெட்ரோலிய தயாரிப்புப் பொருள்கள், நகைகள், நவரத்தினக் கற்கள் ஆகியவை சிங்கப்பூருக்கு அதிகம் ஏற்றுமதியாயின.
ஏற்றுமதிகள் கூடி இருந்தாலும் இந்த ஆண்டு நிலவரம் எப்படி இருக்கும் என்பதைக் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வர்த்தக வல்லு நரான பேராசிரியர் பிஸ்வாஜித் தர் தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 2020ல் US$282 மில்லியன் (S$382 மில்லியன்) மதிப்புள்ள நகைகளும் நவரத்தின கற்களும் ஏற்றுமதியாயின. இவற்றின் மதிப்பு 2021ல் 133 விழுக்காடு அதிகரித்து US$658 மில்லியனாக இருந்தது.
சிங்கப்பூருக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிகளின் மதிப்பு 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரைப்பட்ட காலகட்டத்தில் US$6.9 பில்லியனாக இருந்தது. இது 2020ல் US$6.3 பில்லியனாகக் குறைந்தது.
என்றாலும் சென்ற ஆண்டு அதே காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு US$8.2 பில்லியனாக அதிகரித்ததாக இந்திய வர்த்தக அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் இந்தியப் பொருளியல்தான் உலகிலேயே ஆக வேகமாக வளரும் சூழல் இருக்கிறது என்று அனைத்துலக பணநிதியம் முன்னுரைத்து இருக்கிறது.
என்றாலும் நாட்டில் கொவிட்-19 தொற்று காரணமாக பயனீடுகள் இன்னமும் மந்தமாகவே உள்ளன. இந்த நிலையில், நாட்டின் ஏற்றுமதி கூடியிருப்பது பொருளியலுக்குச் சாதகமான, ஒளிமயமான ஓர் அம்சமாகத் தெரிகிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
சிங்கப்பூருக்கான இந்திய ஏற்றுமதி குறிப்பிட்ட துறைகளில் தொடர்ந்து கூடும் என்று ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கியின் வர்த்தக, மூலதன பிரிவின் தலைவர் கௌரவ் பட்னாகர் கூறுகிறார்.
தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் இந்தியா வலுவான நிலையில் இருக்கிறது. சிங்கப்பூர் அறிவார்ந்த நகர் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதையொட்டி பெரும்பாலான நிறுவனங்கள் மின்னிலக்கமயமாகி வருகின்றன. இதன் காரணமாக இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறைக்குப் பெரும் வாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் புதிய வேலைகளும் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த இந்திய ஏற்றுமதிகளின் மதிப்பு சென்ற ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடையில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 49.7% கூடி US$301.4 பில்லியனாக இருந்தது.

