யு நெங் தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஏறத்தாழ 200 பேருக்கு நெற்பயிர் விவசாயம் பற்றி கற்றுக்கொடுக்கிறது.
சுற்றுப்புறம் பற்றியும் உணவு விரயமாவதைத் தடுப்பது குறித்தும் மாணவர்களுக்குப் போதிக்கும் திட்டத்தின் பகுதியாக மாணவர்கள் நெற்பயிரை பயிரிடுகிறார்கள்.
வகுப்பறைகளில் விதை விதைத்து, பிறகு நாற்றைப் பிடுங்கி அறிவியல் சோதனைக் கூடத்திற்கு வெளியே இருக்கும் பெரும் பெரும் கலன்களில் அவற்றை நட்டு மாண வர்கள் பயிர் செய்கிறார்கள்.
அந்தக் கலன்களின் மொத்த பரப்பளவு ஏறத்தாழ 30 சதுர மீட்டராக இருக்கிறது. சுமார் நான்கு முதல் ஐந்து மாதங்களில் நெற்பயிரை அறுவடை செய்யும்போது ஒவ்வொரு மாணவருக்கும் கிட்டத்தட்ட ஒரு கிண்ணம் அளவுக்கு அரிசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு விரயமாவதைப் பற்றி மாணவர்களுக்குக் கற்று கொடுப்பது இந்தக் கல்வி திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. அதே வேளையில், இந்தத் திட்டம் மாணவர்களின் கல்விப் பாடங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதாக அந்தப் பள்ளிக்கூடத்தின் துணை முதல்வர் டே-லீ லி தெங் கூறினார்.
இந்தக் கல்வித் திட்டம் மீள்திறன் போன்ற நன்னெறிகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள உதவுகிறது என்று அறிவியல் துறை தலைவி தேவி வாட்டி கூறினார்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் கனமழை காரணமாக நாற்றுகள் மூழ்கி மடிந்துவிட்டன.
ஆனால் விவசாயத்தில் இப்படி நிகழ்வதெல்லாம் வழக்கமானவைதான் என்று ஏற்றுக்கொண்டு மனம் உடையாமல் மாணவர்கள் மீண்டும் நெற்பயிரை வளர்த்தனர் என்று திருவாட்டி டாய் வெய் லிங் என்ற மாணவர் சேர்க்கை அதிகாரி தெரிவித்தார்.

