பொதுப் போக்குவரத்தில் கடந்த ஆண்டு அதிகமான மானபங்கப் புகார்கள் காவல்துறையிடம் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிறரின் உடல் அங்கத்தை பாலியல் வேட்கையுடன் பார்ப்பது தொடர்பாக 79 புகார்களும் மானபங்கம் செய்ததாக 148 புகார்களும் செய்யப்பட்டன.
2020ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 68 மற்றும் 145 என இருந்தன. இந்த இரு வகையான குற்றங்கள் தொடர்பில் 65 பேரை டிரான்ஸ்காம் எனப்படும் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு அதிரடிப் படை கைது செய்தது.
ஆக அண்மையில், பிப்ரவரி 10ஆம் தேதி ரயில் பயணி ஒருவரிடம் இருந்து காவல்துறைக்கு புகார் சென்றது. தமது பாவாடைக்குள் ஆடவர் ஒருவர் படமெடுத்தாக 48 வயதுப் பெண் அந்தப் புகாரை அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா உதவியுடன், சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் ஆடவரைக் கைது செய்தனர்.
வரும் ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பு கட்டம் கட்டமாக விரிவடைய இருப்பதால் குற்றம் நிகழாத, பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை உறுதிசெய்ய பங்காளிகளுடனும் சமூகத்துடனும் இணைந்து பணியாற்றி வருவதாக அதிரடிப் படையின் பயாலேபார் பிரிவு அதிகாரியும் காவல்துறை கண்காணிப்பாளருமான லிம் சின் சியாங் தெரிவித்துள்ளார். அவசர நேரத்தில் காவல் துறையின் உதவி கிடைப் பதை உறுதி செய்யவும் பணிகள் நடைபெறும் என்றார் அவர்.

