பள்ளி முகாம் தலைவர், மென்பந்து அணித் தலைவர், சிண்டா தொண்டூழியர் எனப் பல்வேறு பொறுப்புகளை கோ. சோலை வள்ளி ஏற்றிருந்தார். ஆனால், தனது தொடக்கக் கல்லூரியின் இரண்டாமாண்டு தொடக்கத்தில் திணறினார். எல்லாவற்றுக்கும் சரிசமமாக நேரம் ஒதுக்க முடியாத நிலையில் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.
"பிறரிடம் உதவி கேட்பது பலவீனம் அல்ல. நம்மையே நாம் பராமரித்துக்கொள்வதற்கான ஒரு வழிமுறைதான் அது. இதை நான் உணர்ந்த பிறகு, நண்பர்களுடன் சேர்ந்து தேர்ச்சி பெறக் கடினமாக முயன்றது பலன் அளித்தது," என்றார் ஆங்கிலோ சீன தொடக்கக் கல்லூரியில் பயின்ற 19 வயது சோலை வள்ளி.
பரபரப்பான கல்லூரி வாழ்க்கையில் தொண்டூழியப் பணி மனநிறைவை அளித்தது என்றார் சோலை வள்ளி. கடந்த ஆண்டு கணினித் திறன் பட்டறைக்கான ஏற்பாட்டில் அவர் உதவினார். தொடக்கநிலை மாணவர்களுடன் கலந்துறவாடியது தனக்கு இனிதான ஓர் அனுபவமாக இருந்தது என அவர் குறிப்பிட்டார்.
சிரமப்பட்டு படித்ததற்கு நற்பலன் கிடைத்துள்ளதாக சோலை வள்ளி நம்புகிறார். மேல்நிலைத் தேர்வில் தான் அடைந்துள்ள தேர்ச்சி வழி தன் குடும்பத்துக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறார்.
சிங்கப்பூர் தேசிய அளவில் எதிர்நோக்கும் சிக்கல்களைக் களைய விரும்பும் சோலை வள்ளி, பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு உறவுகள் பயில விருப்பம் தெரிவித்துள்ளார்.

