மேல்நிலைத் தேர்வுக்குச் சில நாள்களே இருந்தபோது தாயாருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானதை அறிந்தார் ஃபாஹீம். இருப்பினும், தொடக்கக் கல்லூரி வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் எதிர்நீச்சல் போட்டாக வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார்.
படித்துக்கொண்டே தாயாரையும் கவனித்துக்கொண்டதாக ஆங்கிலோ சீன தொடக்கக் கல்லூரியில் பயின்ற 19 வயது முகமது ஃபாஹீம் ஃபாரூக் நினைவுகூர்ந்தார்.
கணிதப் பாடத்தில் ஃபாஹீமுக்குக் கொள்ளை ஆர்வம். மேல்நிலை கணிதப் பாடத்துடன் மொத்தம் இரண்டு கணிதப் பாடங்களை அவர் பயின்றார்.
இருப்பினும், 2020ஆம் ஆண்டில் கணிதப் பாடத்தில் அவர் தேர்ச்சி பெறாதது அவரது நம்பிக்கையைக் குலைத்தது.
நண்பர்கள் அளித்த ஊக்கத்தால் மீண்டும் கணிதத்தில் கவனம் செலுத்தி முன்னேறினார் அவர். அதுவரை தலைமைத்துவப் பொறுப்புகளில் முன் அனுபவம் இல்லாத ஃபாஹீம், அக்கடமைகளையும் ஏற்றுக்கொள்ள தைரியமாக முன்வந்தார்.
தமிழ்க் கலாசார மன்றத்தில் செயலாளராக இருந்த அவருக்கு, தனது திறன்களின் மீது நம்பிக்கை பிறந்ததுடன் தன்னைக் குறைத்து மதிப்பிடும் பழக்கமும் நீங்கியது.
"நமது நடத்தைதான் நமக்கு மரியாதையைத் தேடித் தரும் என்பதை ஒரு தலைவராக உணர்ந்துகொண்டேன்," என்றார் ஃபாஹீம். கணிதத்தில் உள்ள ஆர்வத்தால் எதிர்காலத்தில் வணிகத்துறையில் பணியாற்ற விரும்புகிறார் ஃபாஹீம்.

