கொவிட்-19 தொடங்கிய காலத்தில் சுகாதார கொள்கை ஆலோசகர் ராஜகாந்த், 46, கடுமையாக நோய்வாய்ப்பட்டோருக்கான நிதித்திரட்டுக்காக நெடுந்தொலைவிற்கு சைக்கிள் ஓட்டுகிறார்.
அரியவகை நோய்களால் பாதிக்கப்பட்ட 150 நோயாளிகளுக்காக மொத்தம் 150 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி அவர்களுக்காக 15,000 வெள்ளி நிதித்திரட்டுவதே திரு ராஜின் குறிக்கோள்.
"நான் சைக்கிளில் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 100 வெள்ளியைத் திரட்ட விரும்புகிறேன்," என்று திரு ராஜ் கூறினார்.
கடந்த வாரம் தொடங்கி திங்கட்கிழமைக்குள் (பிப்ரவரி 28) சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் 150 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்ட திரு ராஜ் முற்படுகிறார். இதன் மூலம் திரட்டப்படும் நிதி அரியவகை நோய் சங்கத்திற்கு வழங்கப்படும்.
நிதித்திரட்டு யோசனைக்காக அச்சங்கம் தம்மை அணுகியபோது நெடுந்தொலைவு ஓடுவதற்கு மாறாக சைக்கிள் ஓட்ட முடிவு செய்ததாகத் திரு ராஜ் கூறினார்.
"கொவிட்-19 பரவல் தொடங்கியபோது எனக்குப் பிடித்த நடவடிக்கையான நீச்சலைச் சுதந்திரமாகச் செய்ய இயலவில்லை. அப்போது பொழுதுபோக்கிற்காக தொடங்கிய சைக்கிளோட்டத்தை நற்காரியத்திற்குப் பயன்படுத்தலாம் என எண்ணினேன்," என்று ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் செயலாளருமான திரு ராஜ் கூறினார்.
அசாதாரண, நாட்பட்ட நோயாளிகளைப் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வுசெய்து வந்த திரு ராஜ், அவர்களின் நலனுக்காக முடிந்தவரை பல வழிகளில் குரல் கொடுப்பவராகவும் உள்ளார். சுகாதாரத் துறையில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் திரு ராஜ், தற்போது மெனிஃபெஸ்ட் கொள்கை ஆய்வு நிறுவனத்தில் தலைமை ஆலோசகராக இருக்கிறார். அத்துடன், 'ரெய்ன்போஸ் அக்ரோஸ் பார்டர்ஸ்' என்ற சுகாதார ஆர்வலர் அமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் இவர் உள்ளார்.
"அரியவகை நோய்கள் இருக்கும் பலருக்கு அந்நோயை இனம் கண்டறிவதே சவாலாக இருந்தது. அப்படி தெரிந்துகொண்டாலும் 95 விழுக்காடு நோய்களைக் குணப்படுத்த முடியாது. இத்தகைய நோய்களால் அவதிப்படுவோருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நிதி தேவைப்படுகிறது," என்று மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான திரு ராஜ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மேல்விவரங்களை https://www.giving.sg/rare-disorders-society-singapore/carryhope2022_raj இணையப்பக்கத்தில் காணலாம்.

