கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரேனில் குறைந்தபட்சம் ஒன்பது சிங்கப்பூரர்கள் இன்னமும் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர்களில் எட்டுப் பேர் அமைச்சுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இதர ஒருவருடன் தொடர்புகொள்ள அமைச்சு முயன்று வருகிறது.
சூழ்நிலை அனுமதிக்கும்பட்சத்தில் உக்ரேனில் இருந்து அவர்கள் வெளியேறுவதற்கான வாய்ப்புகளை அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சிங்கப்பூரர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றார் அவர்.
கூடுமான வழிகளில் முடிந்த அளவுக்கு அமைச்சு அவர்களுக்கு உதவும் என்று மன்றத்தில் தாக்கல் செய்த அமைச்சுநிலை அறிக்கையில் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
உக்ரேன்மீது ரஷ்யா படை எடுத்து தாக்கி வருகிறது. இதன் தொடர்பிலான சிங்கப்பூரின் நிலைப்பாடு பற்றி அந்த அறிக்கை விளக்கம் அளித்தது.
"பாதுகாப்பான இடங்களில் தங்கி இருங்கள்; விழிப்புடன் இருங்கள்; அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்துகொள்ளுங்கள்," என்று உக்ரேனில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு அமைச்சர் அறிவுரை கூறினார்.
இதனிடையே, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம், சாங்கி விமான நிலையத்திற்கும் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கும் இடையிலான அனைத்து விமானச் சேவைகளையும் காலவரம்பின்றி ரத்து செய்துவிட்டது.
இதனை அது தனது இணையத்தளத்தில் தெரிவித்தது.
சேவைகள் ரத்தானதால் ஏற்படக்கூடிய வசதிக்குறைவுக்காக அது சம்பந்தப்பட்ட பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

