சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் செயல் கட்சி விரைவாக முடிவு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்று ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி உறுப்பினர் கிறிஸ்டஃபர் டி சூசா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மன்றத்தில் நான்காம் தலைமுறைத் தலைவர்களிடம் (4ஜி) நேரடியாக உரையாற்றிய அவர், அடுத்த அரசியல் வாரிசுக்குத் திட்டமிடுவதில் கவனம் செலுத்தும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், நான்காம் தலைமுறைத் தலைவர்களின் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஓடிவிட்டது. அவர், பிரதமர் லீ சியன் லூங்கிடம் இருந்து அடுத்த பிரதமர் பதவியை ஏற்கவிருந்தார்.
பிரதமர் லீக்கு இந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி 70 வயது ஆனது. அதற்கு முன்பாகவே பிரதமர் பதவியை அடுத்த தலைமுறைத் தலைவரிடம் ஒப்படைத்துவிடலாம் என்று திரு லீ நம்பிஇருந்தார். ஆனால், கொவிட்-19 தொற்றில் இருந்து சிங்கப்பூர் மீண்டு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் தான் பிரதமர் பதவியில் தொடரப்போவதாக திரு லீ பிறகு அறிவித்தார்.
தன்னுடைய வாரிசு யார் என்பதை திரு லீ அறிவிக்கவில்லை. ஆனாலும் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், சுகாதார அமைச்சர் ஓங் யி காங், கல்வி அமைச்சர் சான் சுன் சிங் ஆகியோர் அடுத்த பிரதமர் பதவிக்கு வாய்ப்புள்ளவர்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.
கல்வி அமைச்சர் சான், இப்போது மக்கள் செயல் கட்சியின் இரண்டாவது உதவித் தலைமைச் செயலாளராக இருக்கிறார்.
தங்கள் தலைவர் யார் என்பதைத் தீர்மானிப்பது 4ஜி குழு முழுவதையுமே சார்ந்தது என்று திரு டி சூசா தெரிவித்தார்.
பல கொள்கைகளைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் முன்னதாகவே திட்டமிட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதைத் தமது உரையில் அவர் சுட்டிக்காட்டினார்.
இருந்தாலும் அரசியல் வாரிசை இன்னமும் அது தேர்ந்தெடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் தேசிய வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது பேசிய அவர், கொள்கைகள் சிறந்த பலன்களை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில், தொடர்ச்சி யாக தலைவர்கள் உருவாவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

