சிங்கப்பூரில் கூடுதல் தடுப்பூசியை (பூஸ்டர்) உரிய காலத்தில் போட்டுக்கொள்ளாத காரணத்தால் பிப்ரவரி 14ஆம் தேதிவாக்கில் 21,800 பேர் கொவிட்-19 தடுப்பூசித் தகுதியை இழந்தனர்.
அவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர், அதாவது 48 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் என்று சுகதாார அமைச்சர் ஓங் யி காங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர்களில் இதர 14 விழுக்காட்டினர் நிரந்தரவாசிகள்.
மற்ற 38 விழுக்காட்டினர் வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள்.
கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தவறிய சிங்கப்பூரர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதும் அதற்கு அதிக வயதும் உள்ள முதியவர்கள் என்று நேற்று நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு அளித்த பதிலில் அமைச்சர் கூறினார்.
அவ்வளவாக வெளியே செல்வதில்லை என்பதால் கூடுதல் தடுப்பூசியைத் தாங்கள் போட்டுக் கொள்ளவில்லை என்று பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர்.
முன்பு போட்டுக்கொண்ட தடுப்பூசியே போதிய பாதுகாப்பைத் தரும் என்பதால், கூடுதல் தடுப்பூசி யைப் பிறகு போட்டுக்கொள்ளலாம் என்று தாங்கள் இருந்துவிட்டதாகவும் அவர்கள் கூறியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டினரைப் பொறுத்தவரை, அவர்கள் எதற்காக கூடுதல் தடுப்பூசியை நாடவில்லை என்பதற்கான காரணத்தை அமைச்சு மதிப்பிட முடியவில்லை என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரில் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதற்குப் பிறகு 270 நாள்களுக்குள் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை என்றால் ஒருவர் தடுப்பூசித் தகுதியை இழந்துவிடுவார்.
அந்தத் தகுதியை இழந்தவர்கள் முக்கியமாக உணவகங்களில் அமர்ந்து சாப்பிட முடியாது; கடைத்தொகுதிகளுக்குச் செல்ல முடியாது. கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படி மக்களுக்கு அமைச்சு தொடர்ந்து ஊக்கமூட்டும் என்றும் அமைச்சர் திரு ஓங் தெரிவித்தார்.

