குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்தோர் குறுகிய காலத்தில் கணிசமான தொகையை சம்பாதிக்க உணவு விநியோக, தனியார் வாடகை வாகனத் தளங்கள் கைகொடுக்கின்றன. எனினும், இவற்றுக்கு வேலை செய்யும் விநியோக ஓட்டுநர்கள் வறுமையில் சிக்குவதோடு நிலையற்ற சூழலால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கக்கூடும். கொள்கை ஆய்வுக் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றின் தொடர்பில் அதன் ஆய்வாளர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
போதுமான சேமிப்பு இல்லாததோடு மத்திய சேமநிதிக் கணக்கில் போதுமான தொகை இல்லாமல் போனால் வீடு வாங்குவது போன்ற தங்களின் கனவுகளை நனவாக்க விநியோக ஓட்டுநர்கள் சிரமப்படலாம். அதனால் ஊழியர்களும் நிறுவனங்களும் மத்திய சேமநிதிக் கணக்குகள், காப்புறுதித் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்குத் தொகை நிரப்புவதைக் கட்டாயமாக்குவது போன்ற பரிந்துரைகளைக் கொள்கை ஆய்வுக் கழகம் முன்வைத்தது.
வேறு துறைகளுக்கு மாற விநியோக ஓட்டுநர்களுக்கும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் கூடுதல் உதவி வழங்கலாம் என்றும் கொள்கை ஆய்வுக் கழகம் சொன்னது.

