வெளிநாடுகளிலிருந்து வரும் இல்லப் பணிப்பெண்கள், வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் இதர பெண் ஊழியர்கள் ஆகியோர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து இந்த நிபந்தனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பராமரிப்புத் துறை எதிர்நோக்கும் சுமையைக் குறைக்க இந்த நிபந்தனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது. குறிப்பாக தனியார் மருந்தகங்களுக்கும் பலதுறை மருந்தகளுக்கும் உதவ இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சு சொன்னது.
தங்களின் இல்லப் பணிப்பெண்களை மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள வைக்குமாறு கடந்த ஜனவரி மாதத்துக்கும் சென்ற மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சில முதலாளிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அவ்வாறு செய்யாத முதலாளிகளுக்கு இனி அடுத்த மாதம் 30ஆம் தேதிவரை நேரம் உள்ளது.
சில முதலாளிகளுக்கு இம்மாதமும் அடுத்த மாதமும் அறிக்கை அனுப்பப்படவிருந்தது. இவர்களுக்கு அடுத்த மாதம் இறுதியிலிருந்து தபால் வழியாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் அறிக்கை அனுப்பப்படும். தங்களிடம் பணியாற்றுவோரை இப்போதே மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளவைக்க முதலாளிகள் எண்ணினால் மருந்தகங்கள் அவர்களைத் திருப்பி அனுப்பமாட்டா.
எனினும், அவ்வாறு செய்யாமல் பரிசோதனையை ஒத்திவைக்குமாறு முதலாளிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் ஆறு பலதுறை மருந்தகங்கள் கூடுதல் நேரம் இயங்கி வருகின்றன. அதைத் தொடர்ந்து இந்த நிபந்தனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

