சிங்கப்பூரில் நேற்று பிற்பகல் தொடர்ந்து பெய்த கன மழையால் சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
பொங்கோல் வே பகுதியில் நேற்று மாலை ஐந்தறை மணியளவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தெம்பனிஸ் விரைவுச்சாலை, காலாங்-பயா லேபார் விரைவுச்சாலை ஆகியவற்றுக்கு அருகே பொங்கோல் வே அமைந்துள்ளது.
பிற்பகல் சுமார் 3.50 மணிக்கு தஞ்சோங் பகார், கிரெய்க் சாலைகளில் உள்ள சாக்கடைகளிலும் கால்வாய்களிலும் நீரின் அளவு கொள்ளளவில் 90 விழுக்காடைத் தொட்டதாக தேசிய தண்ணீர் முகவை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தது. சுவா சூ காங் அவென்யூ ஒன்று, தெக் வை லேன் ஆகியவற்றிலும் பிற்பகல் 4.10 மணியளவில் இவ்வாறு நிகழ்ந்ததாக முகவை குறிப்பிட்டது.
அல்ஜுனிட், அப்பர் பயா லேபார், உள்ளிட்ட சாலைகளிலும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருந்ததாக எச்சரிக்கப்பட்டிருந்தது.

