தமது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்ததாக 19 வயது இளையர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவரான அவர் மீது, பாலியல் பலாத்காரம் செய்ததாக இரு குற்றச்சாட்டுகள், உடலுறவு மூலம் பாலியல் துன்பம் விளைவித்ததாக இரு குற்றச்சாட்டுகள், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒரு குற்றச்சாட்டு, வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக இரு குற்றச்சாட்டுகள் ஆகியன சுமத்தப்பட்டுள்ளன.
2020 ஜனவரி மாதம் 11 வயதாக இருந்த தமது தங்கையை அவர் இருமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படுகிறது. முன்னதாக 2017ஆம் ஆண்டு அந்தக் குற்றத்தைச் செய்ய அவர் முயன்றுள்ளார்.
தொடர்ந்து 2018ஆம் ஆண்டு அந்தச் சிறுமியை அந்த இளையர் இருமுறை தாக்கியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பராமரிப்பின்கீழ் சிறுமி உள்ளார்.
அண்ணன், தங்கையின் பெற்றோர் நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
$50,000 பிணை அனுமதிக்கப்பட்டுள்ள பதின்ம வயது இளையர் மீண்டும் இம்மாதம் 23ஆம் தேதி நீதிமன்றம் வரவேண்டும்.
பாலியல் பலாத்காரக் குற்றம் ஒவ்வொன்றிற்கும் 8 ஆண்டு முதல் 20 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை, குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் ஆகியன விதிக்கப்படலாம்.
பாதிக்கப்பட்டவர் சிறுமி என்பதால் குற்றவாளியைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

