சுற்றுலாத் துறையில் பெரிய அளவில் தொழில்துறை, உல்லாச நிகழ்ச்சிகளை இந்த ஆண்டில் அரங்கேற்ற சிங்கப்பூர் ஆயத்தமாகி வருகிறது.
வர்த்தக, தொழில் அமைச்சின் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பேசிய துணை அமைச்சர் லோ யென் லிங், இந்த ஆண்டின் பிற்பகுதியில் மேலும் பல நிகழ்ச்சிகள் சிங்கப்பூரில் நடக்கும் என்று தெரிவித்தார்.
உலக சுகாதார பாதுகாப்பு மாநாடு 2022, ஃபார்முலா1 சிங்கப்பூர் கார் பந்தயம் முதலானவை அவற்றில் அடங்கும்.
"உயர்தர தொழில்துறை, உல்லாச நிகழ்ச்சிகளுக்கான முன்னணி இடம் என்ற சிங்கப்பூரின் நிலையை நாம் தற்காப்போம்," என்று அமைச்சர் கூறினார்.
சென்ற மாதம் இங்கு நான்கு நாள்கள் நடந்த சிங்கப்பூர் விமானக் கண்காட்சி 2022 நிகழ்ச்சிக்கு 13,000 வர்த்தக பிரமுகர்கள் வந்ததாக மதிப்பிடப்படுகிறது. 39க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600 நிறுவனங்கள் அதில் பங்கெடுத்தன.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் அண்மையில் 'சுற்றுலாத்துறை வாழ்க்கைத்தொழில் மையம்' என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கியது. சுற்றுலா துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் பயிற்சியளிப்பது அதன் நோக்கம்.
அனைத்துலக பயணங்கள் சூடுபிடிக்கும் நிலையில், கழகம் 'சிங்கப்பூர் மறுகற்பனை' என்ற தனது இயக்கத்தை வேகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுலாத் துறை நிறுவனங்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை உருவாக்க புதுப்புது அனுபவங்களை ஏற்படுத்தித்தர கழகம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

