சிங்கப்பூரின் புகைபிடித்தல் தடை ஜூலை 1 முதல் நீட்டிக்கப்படும். இதில் அனைத்து பொதுப் பூங்காக்கள், தோட்டங்கள், 10 பொழுது போக்கு கடற்கரைகள் மற்றும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் துடிப்பான, அழகான, தூய்மையான இடங்கள் உட்பட பல பகுதிகளைக் கொண்டி ருக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து சிங்கப்பூரைப் பாதுகாப்பதற்காக இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் டாக்டர் கோர் கூறினார்.
தற்போது, சிங்கப்பூரின் புகைபிடித்தல் தடையானது தனியார் மற்றும் பொது வீடமைப்புப் பேட்டைகளில் உள்ள அக்கம்பக்க பூங்காக்கள், நீர்த்தேக்கங்கள், இயற்கை வனப்பூங்கா போன்ற இடங்களை உள்ளடக்கியது.
பாதுகாப்பான நடைபாதைகள், பேருந்து நிறுத்தத்திலிருந்து 5 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள், வெற்றுத் தளங்கள் ஆகியவற்றின் கீழும் புகைபிடித்தல் அனுமதிக்கப்படாது.
ஆனால், இந்தத் தடை நீட்டிப்பால் தேசிய பூங்காக் கழகத்தால் நிர்வகிக்கப்படும் மற்ற பொதுப் பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் துடிப்பான, அழகான, தூய்மையான இடங்கள் ஆகியவற்றில் ஜூலை முதல் புகைபிடிப்பது தடைசெய்யப்படும்.
லோரோங் ஹாலுஸ் பாலம் போன்ற ஆறுகளுக்கு அருகிலுள்ள கால்வாய்கள் போன்ற தளங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
செங்காங் மிதக்கும் ஈரநிலம் போன்ற சதுப்பு நிலங்கள் மற்றும் பெரிய வடிகால்களுக்கு அருகிலுள்ள பகுதிகளும் இந்தத் தடையில் அடங்கும். 10 கடற்கரைகளில் புகைபிடிப்பதற்கும் தடை விதிக்கப்படும்.
சாங்கி, ஈஸ்ட் கோஸ்ட், வெஸ்ட் கோஸ்ட், செம்பவாங், பாசிர் ரிஸ், பொங்கோல் கடற்கரைகள் ஆகியவற்றுடன் கோனி தீவில் உள்ள கடற்கரையும் இதில் அடங்கும்.
சிலோசோ கடற்கரை, தஞ்சோங் கடற்கரை, செந்தோசாவில் உள்ள பலவான் கடற்கரை ஆகியவற்றிலும் புகைபிடிக்க அனுமதிக்கப்படாது.
ஜூலை 1 ஆம் தேதி தடை அமலுக்கு வரும்போது, புகைப்பிடிப்பவர்கள் பெரும்பாலும் புகைபிடிக்கும் இடங்கள், திறந்த பொது இடங்களான காலி நிலம், மூடப்படாத நடைபாதைகள், பல மாடி கார் நிறுத்தும் இடங்கள், மேல் தளத்தில் உள்ள மூடப்படாத பகுதிகள் போன்றவற்றில் மட்டுமே புகைபிடிக்க முடியும்.
புகைபிடிக்கும்போது அங்கிருந்து புகை வெளியேறாத வரை, தங்கள் சொந்த வீடுகள் அல்லது கார்கள் போன்ற தனிப்பட்ட இடங்களில் அவர்கள் புகைபிடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.