சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று பிற்பகல் பெய்த கனமழை காரணமாக ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32லும் பூன் லே வே அருகில் உள்ள என்டர்பிரைஸ் சாலையிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இதன் விளைவாக வாகனங்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உதவி வழங்க தனது அதிகாரிகளைப் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பிவைத்துள்ளதாக பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.
ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் வெள்ள நீர் பிற்பகல் 3.50 மணி அளவில் வடிந்தது. அப்பகுதியில் உள்ள இரண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புக் கட்டடங்களுக்கு அருகில் உள்ள சாக்கடைகளில் 90 விழுக்காட்டு அளவுக்கு நீர் நிரம்பிவிட்டதாக நேற்று பிற்பகல் 3.15 மணி அளவில் கழகம் தெரிவித்திருந்தது.
சுவா சூ காங் அவென்யூ 1, டெக் வாய் லேன் ஆகிய வட்டாரங்களில் வெள்ள அபாயம் இருப்பதாக பிற்பகல் 3.25 மணி அளவில் அது எச்சரிக்கை விடுத்தது.
உட்லண்ட்ஸ் சாலையிலும் கிராஞ்சி விரைவுச்சாலையிலும் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று பிற்பகல் 3.30 மணி அளவில்
கழகம் எச்சரித்தது. அவ்விடங்
களைத் தவிர்க்கும்படி அது பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது.
இம்மாத முற்பாதியில் பெரும்பாலான நாள்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.
இன்று முதல் வியாழன் வரை பிற்பகல் நேரத்தில் இடியுடன் மழை பெய்யக்கூடும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் முன்னுரைத்துள்ளது.

