வேலைவாய்ப்பு, முதலீடு, காதல் ஆகியவை தொடர்பிலான மோசடிகளுக்கு உடந்தையாக இருந்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சகோதரிகள் இருவர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரர்களான அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வெள்ளி மோசடிக்கு உதவியதாகத் தெரிகிறது.
20 வயது நூர் சஃபிக்கா முகமது அவால், நேர்மையற்ற முறையில் 200,000 வெள்ளியை வைத்திருந்ததாகவும் அதில் சிறிதளவு பணத்தை ஆடைகள் வாங்கவும் சிங்கப்பூருக்குள்ளேயே விடுமுறையை உல்லாசமாகக் கழிக்கவும் செலவு செய்ததாகவும் கூறப்பட்டது. அதன் தொடர்பில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய ஐந்து குற்றச்சாட்டுகளை சஃபிக்கா நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
அவரது சகோதரியான 19 வயது நூர் அடிக்கா முகமது அவால், தன்மீது சுமத்தப்பட்ட அதேபோன்றதொரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
2020ஆம் ஆண்டு டிசம்பருக்கும் சென்ற ஆண்டு மே மாதத்திற்கும் இடையில் மோசடிகளில் பாதிக்கப்பட்ட 39 பேர் காவல்துறையிடம் புகாரளித்தனர்.
அந்த மோசடிகளில் சகோதரிகள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.
மோசடிக்காரர்கள் முதலில் சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ குறுஞ்செய்தி மூலமாகவோ வேலைவாய்ப்பு தருவதாகத் தொடர்புகொண்டனர்.
பின்னர் இணையத்தில் பொருள்களை வாங்குவதற்கு தரகுப் பணம் தருவதாக ஆசைகாட்டினர்.
காதல் மோசடிகளில் செயலிகள் வழி நட்பை உருவாக்கிக்கொண்டு பிறகு பல்வேறு காரணங்களுக்காகப் பெருந்தொகையை வங்கிப் பரிவர்த்தனை செய்யும்படிக் கேட்டனர்.
2020ஆம் ஆண்டு இறுதியில் 'டேக்ட்' எனும் செயலியின் மூலம் சகோதரிகளின் தாயாரைச் சந்தித்த மோசடிக்காரர்கள்,
ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கி அதற்கான ரொக்கக் கழிவு அட்டைகளைத் தங்களுக்கு அனுப்பும்படிக் கூறினர். தாயாருக்கு அந்த நடைமுறைகள் தெரியாததால் மகள்களின் உதவியை நாடினார்.
ஆனால் சகோதரிகள் இருவரும் தாங்களே மோசடிக்காரர்களைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர்.
தாங்கள் செய்வது சட்டவிரோதமான செயல் என்று தெரிந்தே பணத்துக்காக அவர்கள் அதில் ஈடுபட்டதாக அரசாங்க வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
ஒரு சந்தர்ப்பத்தில் தனக்குச் சொந்தமில்லாத 200,000 வெள்ளியை சஃபிக்கா தானே வைத்துக்கொண்டு தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தினார்.
மோசடிக்காரர்கள் அவரைத் தங்களுக்கு இனி வேலைசெய்ய வேண்டாம் என்று நிராகரித்ததும் வேறொரு மோசடிக்காரருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பண மோசடிக்கு உதவினார்.
இரு சகோதரிகளும் இப்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நன்னடத்தை மற்றும் சீர்திருத்தப் பயிற்சிக்கான தகுதி அறிக்கையை வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கு மீண்டும் அடுத்த மாதம் விசாரணைக்கு வரும்.

