தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதையில் மேலும் 11 நிலையங்கள் இவ்வாண்டின் பிற்பாதியில் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புதிய நிலையங்கள் ஸ்டீவன்சிலிருந்து ஆர்ச்சர்ட்டுக்கும், ஊட்ரமிலிருந்து கரையோரப் பூங்காவுக்கும் இடைப்பட்ட பாதையில் அமைந்துள்ளன.
மூன்றாவது கட்டப் பணிகள் தொடர்பில் இந்தத் தகவல்களைத் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று தம் அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது பகிர்ந்துகொண்டார்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் தடங்கல் பல ஏற்பட்டு இருந்தாலும் எம்ஆர்டி கட்டமைப்பின் விரிவாக்கப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் உறுதியளித்தார்.
நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பல இடங்களுக்கு வடக்கு வட்டாரவாசிகள் செல்வதற்கான பயண நேரத்தை வெகுவாகக் குறைத்திட புதிய நிலையங்கள் உதவும் என்று திரு ஈஸ்வரன் கூறினார்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதை முழுமையாகத் திறக்கப்பட்டதும் 240,000 மேற்பட்ட வீடுகள் ஏதேனும் ஒரு தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் நிலையத்துக்கு 10 நிமிட தொலைவில் அமைந்திருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் மூன்றாவது கட்டத்தில் 13 நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
இருப்பினும், மவுண்ட் பிளேசண்ட், மரினா சவுத் ஆகிய இரண்டு நிலையங்களும் பின்னாளில்தான் திறக்கப்படும் என்றும் அங்குள்ள வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் முடிந்தவுடன் அவை இயங்கத் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே, ஜுரோங் வட்டாரப் பாதை 2027ஆம் ஆண்டில் இருந்தும் குறுக்கு ரயில் பாதை 2030ஆம் ஆண்டிலிருந்தும் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் என்று திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.
உச்ச நேரப் பயணங்களின் தேவை அதிகரிப்பைச் சமாளிப்பது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு அது தொடர்பாகத் தம் அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.

