போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேன் மற்றும் அதன் ஆறு அண்டை நாடுகளுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $2.4 மில்லியன் மதிப்புள்ள உதவிப் பொருட்களை அனுப்பி வைக்கிறது.
போரில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனியர்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாகியுள்ளனர். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டவது தவணை உதவி அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ரெட் கிரசென்ட் கூட்டமைப்பு, தேசிய செஞ்சிலுவைச் சங்கங்கள், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க மன்றம் ஆகியவற்றின் மூலமாக சுமார் 2.4 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.
முதல் தவணையாக இதற்கு முன் சங்கம் அனுப்பி வைத்த 100,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் இம்மாதம் 4ஆம் ேததி உக்ரேனைச் சென்று அடைந்தது. கடந்த மாதம் 25ஆம் தேதி ெபாதுமக்களிடமிருந்து நிதி திரட்டும் முயற்சிகளை சங்கம் தொடங்கியது. அதன் மூலம் இதுவரை மூன்று மில்லியன் வெள்ளி வரை நிதி திரட்டப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் உள்ள உக்ரேனிய மன்றம் நிதி திரட்டும் பணியை செய்து வருகிறது. இங்குள்ள வங்கிகளும் தனது ஊழியர்களிடம் இருந்து நிதி திரட்டி வருகின்றன.
டிபிஎஸ் டிஜிபேங், ஃபுட் பாண்டா ஆகியவை தங்களுடைய செயலி வழியாக நிதி திரட்டுகின்றன. தெமாசெக் அறநிறுவனமும் 100,000 அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரான பெஞ்சமின் வில்லியம், நன்கொடையாளர் சமூகத்தின் ஒற்றுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
"சமூகத்தில் பலர் நிதி திரட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய மோதல் மற்றும் எல்லை நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
திரட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையை சங்கம் உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதி திரட்டு இவ்வாண்டு மே 31ஆம் தேதி முடிவடைகிறது.
சங்கத்தின் இரண்டாவது தவணை உதவி, அகதிகளை ஏற்று வரும் போலந்து, ஹங்கேரி, லித்து வேனியா, ஸ்லோவாகியா, மோல்டோவா, ருமேனியா உள்ளிட்ட ஆறு அண்டை நாடுகளுக்கும் உக்ரேனுக்கும் மனிதாபிமான காரியங்களுக்கு கைகொடுக்கும்.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய சிறார்கள், ஒற்றைப் பெற்றோர், முதியோர், ஊனமுற்றோர் ஆகியோரை இலக்காகக் கொண்டு உதவி வழங்கப்படும் என்று சிங்கப் பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.

