ஈசூன் வட்டாரத்தில் காட்டுப் பன்றி மோதியதால் ஒரு பெண் காயம் அடைந்தார்.
புதன்கிழமை மாலை 6.50 மணியளவில் ஈசூன் ஸ்திரீட் 81ல் உள்ள புளோக் 846லிருந்து உதவி கேட்டு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
நான்கு மாடி புளோக்கின் தரைத் தளத்தில் கடைகள் வரிசையாக உள்ளன. நாயின் உயரம் கொண்ட காட்டுப்பன்றி, பெண் மீது மோதிய பிறகு மூக்குக் கண்ணாடி கடையில் உள்ள கண்ணாடிப் பெட்டகத்தை இடித்துவிட்டு பாய்ந்து ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.
அதே புளோக்கில் உள்ள பழ வியாபாரியான லெமன் டான், 31, உணவு வாங்கிக்கொண்டு கடையின் பின்புறமாக திரும்பிக் கொண்டிருந்தபோது தனது கடைக்கு அடுத்துள்ள கடையிலிருந்து காட்டுப் பன்றி வெளியே ஓடியதாகச் சொன்னார்.
"நான் கடைக்குள் பதுங்கிக் கொண்டேன். வேகமாக ஓடிய காட்டுப் பன்றி ஒரு பெண் மீதும் அவரது மகள் மீதும் மோதியது," என்று ஷின் மின் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
"பெரிய சத்தம் கேட்டது. காட்டுப் பன்றி ஓடியதால் மூக்குக் கண்ணாடி கடையின் காட்சிப் பெட்டகம் உடைந்ததாக பின்னர் தெரிந்துகொண்டேன்.
"காட்டுப் பன்றி மோதிய பிறகு தரையில் பெண் அதிக நேரம் விழுந்துகிடந்தார். அவரது மகள் சத்தமாக அழுது கொண்டிருந்தார்," என்றார் திரு டான்.
அங்கு வந்த குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவி யாளர்கள் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சைகளை செய்தனர். அதன் பிறகு அந்தப் பெண்ணை கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே அவ்வட்டார பொறுப்பாளரான நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கேரி டான், அந்தச் சம்பவம் அதிர்ச்சியளித்ததாக வியாழன் அன்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
"மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்தப் பகுதியில் காட்டுப் பன்றிகள் வருவதற்குத் தயங்கும். நகரமன்ற தூதர்களையும் துப்புரவாளர்களையும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொண்டேன்," என்று கேரி டான் தெரிவித்தார்.

