சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்ந்து குறைந்துவருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, புதிதாக 15,345 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. 1,396 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
ஒப்பிட்டுப் பார்க்கையில், கடந்த வியாழக்கிழமை 16,165 பேருக்குத் தொற்று உறுதியானது. அன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தோர் எண்ணிக்கை 1,450ஆக இருந்தது.
முந்திய வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்றாட புதிய தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. முந்திய வெள்ளிக்கிழமையன்று 17,564 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியிருந்தது.
வாராந்திர கொவிட்-19 தொற்று அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து 1க்குக்கீழ் 0.92 ஆக உள்ளது. மார்ச் 2ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து 10ஆவது நாளாக இந்த விகிதம் 1க்குக்கீழ் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை 6ஆக இருந்த மரண எண்ணிக்கை நேற்று 13ஆகப் பதிவானது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 39 பேர் இருந்தனர். 170 பேருக்கு உயிர்வாயு தேவைப்பட்டது.
சிங்கப்பூரில் ஓமிக்ரான் அலை உச்சம் தொட்டு பிறகு தணிந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறி இருக்கிறார்.
உள்ளூரில் கிருமி தொற்றியோரில் 13,215 பேருக்கு ஏஆர்டி பரிசோதனை மூலம் தொற்று உறுதியானது. இதர 1,915 பேருக்குத் தொற்று இருந்தது பிசிஆர் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 215 பேருக்குத் தொற்று இருந்தது. அவர்களில் 76 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மூலமாகவும் 139 பேருக்கு ஏஆர்டி பரிசோதனை மூலமாகவும் தொற்று உறுதியானது.
சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 917,103 ஆனது. மொத்த மரண எண்ணிக்கை 1,129 ஆகியது.
தகுதி பெற்றவர்களில் ஏறக்குறைய 95 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
மொத்த மக்களில் 69% பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

