உக்ரேன் மீதான ரஷ்ய படை எடுப்பால் மோசமடைந்து வரும் செலவுகள் அதிகரிப்பால், சிங்கப்பூர் நிறுவனங்கள் சில சில்லறைப் பொருள்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்படும் செலவுகள், நடைமுறை சவால்களின் பின்னணியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சில சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் விலைகளைச் சரிசெய்தாலும், மற்றவர்கள் தங்கள் அடுத்த நகர்வைத் திட்டமிடுவதற்கு முன் மாறி வரும் போர் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
"உக்ரேன் நெருக்கடி, வர்த்த கத்தைச் சீர்குலைத்து வணிக உணர்வுகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், பயனீட்டாளர்களுக்கு சில விலை உயர்வுகளையும் ஏற்படுத்தும் என்றார்," சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் திரு கெர்ட் வீ.
"எண்ணெய் மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவதால், வர்த்தகச் செலவுகள் அதிகரிக்கும். சந்தையைச் சரிசெய்யவும், வளங்களைப் பெறுவதில் மாற்று வழிகளைத் தேடவும் நேரம் எடுக்கும். மேலும் அதிக செலவில் சிக்கியுள்ள வர்த்தகங்கள் அதற்கேற்ப தங்கள் விலைகளை மாற்றியமைக்க வேண்டியிருக்கும்," என்றும் அவர் கூறினார்.
எரிசக்தி, போக்குவரத்து, விநியோகிப்பாளர் பொருள்களின் உயரும் செலவுகளால், குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்கள் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று கூறினார் பூன் லே வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவரும் சிங்கப்பூர் வர்த்தகர் சங்கங்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவருமான திரு குவெக் சியூ பெங்.
இந்த நெருக்கடியால் எண்ணெய் விலைகள், விமான சரக்கு செலவுகள் அதிகரிப்பு, கூடுதல் விநியோக சங்கிலி தடைகளுக்கு வழிவகுத்தது என்று அறைகலன் சில்லறை விற்பனையாளரான கம்யூன் லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் திரு எர்னி கோ கூறினார்.
அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்க அந்நிறுவனம் அதன் சில தயாரிப்புகளின் விலையை 5% முதல் 10% வரை உயர்த்தும். போர் நீடித்தால் பயனீட்டாளரின் நம்பிக்கையும் விற்பனையும் குறையும். அவர்கள் மரப் பொருள்களுக்குப் பதிலாக அடிப்படைத் தேவைகளுக்கு அதிகமாகச் செலவிடலாம் என்றும் அவர் கூறினார்.
திரு கோவின் கருத்தை ஆமோதித்தார் சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் திரு ஜிம்மி கியாம்.
"நிச்சயமற்ற தன்மைகள் நிலவும் போது, குறிப்பாக அத்தியாவசியமற்ற பொருள்களுக்கு பெரும்பாலான மக்கள் தங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்வார்கள். அவர்கள் மலிவுச் சின்னப் பொருள் களையும் தேர்வு செய்வார்கள்," என்று அவர் கூறினார்.
அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் மற்றும் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வால் விளையும் விலை மாற்றங்களுக்கு முன், 'கோர்ட்ஸ் சிங்கப்பூர்' நிறுவனம் அதன் மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், அறைகலன்களுக்கான வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது என்று கூறி யது.
"போர் நீடித்தால் எண்ணெய், எரிவாயு விலைகள் மேலும் அதிகரிக்கும் என்ற கவலைகள் உள் ளன. இது மின்சாரத்தின் விலையை மேலும் உயர்த்தும் என்பதால் பொட்டலமிடுதல் போன்ற பெட்ரோலிய ரசாயனத் தொழில்கள் தொடர்பான பொருள்களின் உற்பத்தியைப் பாதிக்கலாம்," என்றார் சிங்கப்பூர் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் தலைமைச் செயலாளர் திரு லாரன்ஸ் பெக்.

