கட்டுமான ஊழியர்கள் தங்கள் பணியிடங்களிலும் தங்குமிடங்களிலும் வெப்ப அழுத்தத்திற்கு எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய புதிய ஆய்வை சிங்கப்பூரின் அறிவியலாளர்கள் அடுத்த மாதம் தொடங்குவார்கள்.
வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட 40 ஊழியர்களின் முக்கிய வெப்பநிலையும் வெப்ப தேவைகளும் அவர்கள் வேலை செய்யும்போது கண்காணிக்கப்படும். இது ஊழியர்களின் வெப்ப அழுத்தத்தைக் குறைக்க, தடுக்க அறிவியலாளர்கள் தீர்வுகளை முன்மொழிய வழிவகுக்கும்.
பருவநிலை மாற்றம் அதிக வெப்பநிலையையும் அதிக வெப்ப அலைகளையும் எதிர்காலத்தில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த ஆய்வு 2020ல் தொடங்கப்பட்ட புரோஜெக்ட் ஹீட்சேஃப் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தையும் வேலை உற்பத்தித்திறனையும் உயரும் வெப்பநிலை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்டறியும். இந்த ஆய்வுத் திட்டம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) நடத்தப்படும்.
அதிகரித்து வரும் வெப்பநிலை ஆசியா முழுவதும் வெப்ப அலைகளின் அச்சுறுத்தலை அதிகரித்து வருகிறது. மேலும் இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்த வட்டாரத்தில் உள்ள நாடுகள் கடுமையான வறட்சி நிலைமைகளால் பாதிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகளின் பருவநிலை அறிவியல் அமைப்பு கடந்த மாதம் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் வெப்பம் தொடர்பான நிலைமைகள் ஈரப்பதம், நகர்ப்புற வெப்பத்தின் விளைவு ஆகியவற்றால் அதிகரிக்கின்றன.
பகலில் கட்டடங்கள் நிறைந்த பகுதிகளில் சேரும் வெப்பம் இரவில் வெளியாகிறது. அப்படி என்றால் இங்குள்ள நகர்ப்புறங்கள் குறைவான கட்டடங்கள் உள்ள இடங்களைவிட வெப்பமானவையாக உள்ளன.
"மாறிவரும் பருவநிலையில் வெப்பம் தொடர்பான சிக்கல்களால் அதிகம் பாதிக்கப்படுவோர் திறந்தவெளியில் வேலை செய்யும் ஊழியர்கள் அல்லது காற்றோட்டம் குறைவான சூழல்களில் வசிப்பவர்கள் அல்லது வேலை செய்பவர்கள், இதய நோய் போன்ற மருத்துவ பிரச்சினைகளைக் கொண்ட மூத்தவர்கள்," என்றார் இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளரான என்யுஎஸ்ஸின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் இணைப் பேராசிரியர் ஜேசன் லீ.
ஊழியர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார்களா, அதை எப்படி உணர்கிறார்கள் என்பதைக் கண்டறியவும் ஆராய்ச்சியாளர்கள் முனைவார்கள். ஊழியர்கள் தங்கள் தங்குமிடங்களில் எப்படி ஓய்வெடுக்கிறார்கள் என்பதையும் அவர்கள் கவனிப்பார்கள்.
"அவர்கள் நன்றாக ஓய்வு எடுக்கவில்லை என்றால், அது அவர்களின் ஒட்டுமொத்த வெப்ப அழுத்தத்தை அதிகரிக்கலாம். ஒவ்வொரு வேலை நாளிலும் அவர்களின் தொடக்கநிலை எவ்வாறு உள்ளது என்பது முக்கியமானது," என்றார் பேராசிரியர் லீ.
ஆய்வின் முடிவுகளை வைத்து, ஊழியர்கள் வெப்பத்தைச் சமாளிக்கவும், வெப்ப அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கவும் தீர்வுகளை குழு முன்மொழியும்.

