பைனரி குறியீடு, இயந்திரக் கற்றல், தரவு போன்றவை ஆகியவை சிறு குழந்தைகளுக்குப் புரிந்துகொள்ள முடியாத சொற்களாக இருக்கலாம். ஆனால், தேசிய செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தால் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான புதிய கதைப் புத்தகத்தின் மூலம் சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு அமைப்பு சிறுவர்களுக்கு இந்தச் சொற்களைப் புரிய வைக்க விரும்புகிறது.
கீழ் தொடக்கநிலை மாணவர்களை இலக்காகக் கொண்டு, உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தகம், சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு அமைப்பின் கல்வியறிவுத் திட்டமான 'AI ஃபார் கிட்ஸ்' தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதை எவ்வாறு திறம்படவும் பொறுப்புடன் பயன்படுத்துவது என்பது பற்றியும் அவர்களுக்கு முதல் முறையாக விளக்கிச் சொல் கிறது.
மெட்டா அமைப்பின் நிதியாதரவுடன் 'டெய்சி அண்ட் ஹெர் ஏஐ ஃபிரண்ட்ஸ்' என்ற தலைப்பிலான விளக்கப்பட புத்தகத்தின் 10,000 இலவசப் பிரதிகள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும். புத்தகங்கள் பொது நூலகங்களில் வைக்கப்படும். ஆனால் அது விற்கப்படாது.
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு அமைப்பின் மூத்த துணை இயக்குநர் கூ செங் மெங், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு செயற்கை நுண்ணறிவு கருத்துகளைப் பற்றி அனைவரும் அறிய பிரதிகள் வழங்கப்படும் என்றார்.
தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங், குழந்தைகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதத்தைப் பெருந்தொற்று மாற்றியமைத்துள்ளது என்றும் மின்னிலக்கத் திறன்கள் இன்று வேலைகளில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் கூறினார்.

