சட்டவிரோதமாகக் குதிரை பந்தயம் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 64 வயதிலிருந்து 86 வயது வரை இருக்கும் ஐவரின் மீது காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
சனிக்கிழமை (மார்ச் 12) அன்று வாம்போ டிரைவில் காவல்துறை நடத்திய அமலாக்க நடவடிக்கையில் $3000 மேல் கைப்பற்றப்பட்டது.
மூவர் சட்டவிரோதமான பந்தயக்காரர்கள் என்றும், மற்ற இருவரும் அவர்களிடத்தில் பந்தயம் கட்டியவர்கள் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக திங்கட்கிழமையன்று காவல்துறை தெரிவித்தது.
தற்போது விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
பந்தயக்காரர்களிடத்தில் பந்தயம் கட்டுபவர்களுக்கு $5000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று காவல்துறை எச்சரித்தது.
பந்தயக்காரர்களுக்கு $20,000யிலிருந்து $200,000 வரை அபராதமும் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.
தொடர்ந்து இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுக்கப்படும் என்றும், சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்தது.

