மோட்டார்சைக்கிள்களுக்குரிய வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) ஏலத்திற்கான வைப்புத்தொகை 200 வெள்ளியிலிருந்து 800 வெள்ளிக்கு உயர்த்தப்பட உள்ளது.
மேலும், இந்தப் பிரிவுக்கான சான்றிதழின் செல்லுபடி காலம் மூன்று மாதம் என பாதியாகக் குறைக்கப்பட உள்ளது. இந்த மாற்றங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது. மார்ச் மாதத்தின் இரண்டாவது ஏலம் அடுத்த வாரம் தொடங்கும்போது இந்த மாற்றங்கள் நடப்புக்கு வரும்.
விவேகமான ஏல நடைமுறையை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது. மோட்டார்சைக்கிள் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் அண்மைய ஆண்டுகளாக புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த புதன்
கிழமை இடம்பெற்ற ஆக அண்மைய ஏலத்தில் அதன் கட்டணம் $11,400 என இதுவரை காணாத உச்சத்திற்குச் சென்றது. பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் இது $10,589 ஆக இருந்தது. உயர்வு விகிதம் 7.66 விழுக்காடு.
மோட்டார்சைக்கிள் விலைகள் கடுமையாக ஏறுவதற்கு பெரிய விநியோகிப்பாளர்களின் ஊக வணிகமே முக்கிய காரணம் என வாகனத் தொழில் துறையினர் அடிக்கடி கூறிவந்தனர். இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த, வைப்புத் தொகையை உயர்த்த அவர்கள் பரிந்துரைத்திருந்தனர். வாகன உரிமைச் சான்றிதழ் பெற்ற பின்னர் மோட்டார்சைக்கிளைப் பதிவு செய்யாத விநியோகிப்பாளரின் வைப்புத் தொகை பறிபோகும் என்பதால் அவர்கள் அந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.
சான்றிதழ் செல்லுபடி காலத்தைக் குறைப்பதும் ஊகத்தை முறியடிப்பதற்கான ஒரு தீர்வாகப் பார்க்கப்படுகிறது. காரணம், சான்றிதழ் பெற்ற பின்னர் உண்மையான வாங்குவோரை குறைந்த காலத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏலத்தில் வென்றவர்களுக்கு ஏற்படும். மேலும், பயன்படுத்தப்படாத சான்றிதழ்கள் மிக விரைவாக ஏல நடைமுறைக்கே திரும்ப வந்துவிடுவதன் பொருளாகவும் இதனைப் பார்க்கலாம் என்று ஆணையம் குறிப்பிட்டது.
ஏலத்திற்கான வைப்புத்தொகையை 1,000 வெள்ளிக்கு உயர்த்து மாறு தங்களது சங்கம் பரிந்துரைத்து இருந்ததாக சிங்கப்பூர் மோட்டார் சைக்கிள் வர்த்தகர் சங்கத் தலைவர் ரெக்ஸ் டான் கூறினார். "இதனை ஓராண்டுக்கு முன்னரே அறிமுகம் செய்திருந்தால் குறிப்பிட்ட பலனை கண்டிருக்க முடியும். விலைகள் தாறுமாறாக ஏறியிருக்காது," என்றார் அவர்.

