ஜூ சியாட்டில் அமைந்துள்ள பிரபல ரொட்டி பிராட்டா கடை உரிமையாளர் திரு சோமசுந்தரம் மோகன் காலமானார்.
அவருடைய மறைவு குறித்து ஒரு பேஸ்புக் பக்கத்தில் மார்ச் 12ஆம் அன்று முதலில் பதிவு செய்யப்பட்டிருந்தது. திரு மோகன் மாரடைப்பால் மாண்டதாக அதில் குறிப்பிட்டிருந்தது.
ஆனால் திரு மோகன் கடை நடத்திவந்த தின் யியாங் காபிக் கடையில் கடை வைத்திருக்கும் மற்றவர்கள் அவர் கீழே விழுந்து அடிப்பட்டு இறந்ததாகக் கூறினர்.
திரு மோகனுக்கு 53 அல்லது 56 வயது இருக்கும் என நம்பப்படுகிறது.
அவருடைய இறப்புக்கு இணையத்தில் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அவர் ஒரு சிறந்த சமையல் வல்லுநர் என பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
ஜூ சியாட்யில் அவர் கடந்த எட்டு மாதங்களாக தமது மனைவியுடன் கடை நடத்திவந்தார். இந்தத் தம்பதி வாரத்தில் ஏழு நாள்களும் காலை 6.30 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை வேலை பார்த்தார்கள்.
தமக்கு 12 வயது இருக்கும்போதே திரு மோகன் பிராட்டா போட கற்றுக்கொண்டார்.
அலெக்சண்டராவில் உள்ள தமது தாயார் கடையில் உதவினார்.
32 வயதில் ஹேக் ரோடு உணவு அங்காடி நிலையத்தில் ஒரு பிராட்டா கடையில் வேலை பார்த்தார். அங்கு வேலை பார்த்தபோது, பிராட்டா போட வித்தியாசமான உத்திகளைக் கையாண்டார். புதுப்பிப்புப் பணிகளுக்காகக் கடை மூடப்பட்டபோது, அவருக்கு வேலையில்லாமல் போனது.
அப்போதுதான் ஜூ சியாட்யில் சொந்தமாகக் கடை திறந்தார்.
அவருடைய மொறுமொறு பிராட்டவுக்காக ஒரு தனி விசிறிகள் கூட்டமே இருந்ததது. அனைத்து இனத்தினரும், வயதினரும் அவருடைய பிராட்டாவை விரும்பி சாப்பிட்டார்கள்.
சிங்கப்பூரின் சிறந்த பிராட்டா பட்டியலில் அவருடைய கடை இடம்பிடித்திருந்தது.