ஹாவ்காங் வட்டாரத்தில் கட்டுமானத் தளத்தில் ஒரு இரும்புப் பலகை வெளிநாட்டு ஊழியர் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
கட்டுமானத் தளத்தில் ஒரு பள்ளத்தில் வேலை பார்த்துகொண்டிருந்தபோது, இரும்புப் பலகை அவர் மேல் விழுந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.
மாண்டவர் சீனாவைச் சேர்ந்த 43 வயது ஆடவர் என தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு சீன நாட்டினர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். பலகை விழும்போது அதை தம் கையால் தடுக்க முயன்றபோது அவருக்குக் காயங்கள் ஏற்பட்டன. அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
ஹாவ்காங் அவென்யு 3ல் உள்ள பிடிஓ கட்டுமானப் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டிருந்தனர்.
கட்டுமானத் தளத்தில் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் காவல் துறையும் விசாரணை நடத்திவருகின்றன.
இந்த ஆண்டு வேலையிடத்தில் நடந்துள்ள ஐந்தாவது மரணம் இது. சென்ற ஆண்டு வேலையிடங்களில் 37 பேர் மாண்டனர்.