கொவிட்-19 கொள்ளைேநாய்ப் பரவல் சூழலால் வேலை அல்லது சம்பளத்தை இழந்தவர்களுக்கு உதவ மூன்று நிதியுதவித் திட்டங்கள் இருந்தன. அவற்றால் கிட்டத்தட்ட 500,000 பேர் பலனடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டிறுதி நிலவரப்படி தற்காலிக நிவாரண நிதி, கொவிட்-19 ஆதரவு மானியம், கொவிட்-19 மீட்சி மானியம் ஆகியவற்றால் சுமார் 480,000 பேர் பலனடைந்துள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் கூறினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் சமூக சேவை ஆய்வு நிலையம் இணையம்வழி நடத்திய கலந்துரையாடலில் திருவாட்டி சுன் பேசினார். உலக சமூக வேலை தினமான நேற்று 'போஸ்ட்-பெண்டெமிக் சேலஞ்சஸ் அண்ட் பிளானிங் ஃபோர் சோஷியல் சர்விசஸ்' எனும் அந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
பிரச்சினைகளுக்கு ஆளாகக்கூடிய அபாயம் உள்ளவர்கள் கொவிட்-19 சூழலால் அதிகம் பாதிக்கப்பட்டதைத் திருவாட்டி சுன் குறிப்பிட்டார். இத்தகையோருக்கு உதவ ஏற்கெனவே 'காம்கேர்' நிதியுதவித் திட்டங்கள் நடப்பில் இருந்தன. அவற்றுடன் கொவிட்-19 நிதியுதவித் திட்டங்களும் பாதிக்கப்பட்டோருக்கு மேலும் பலனளித்ததாக அவர் சொன்னார்.

