கொவிட்-19 கிருமிப்பரவல் போன்ற நெருக்கடி நேரங்களில் சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழில் சபை அரசாங்கத்துக்குக் கைகொடுக்கும் பங்காளியாய் செயல்பட்டுவருவதாகத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் பாராட்டியுள்ளார்.
சிங்கப்பூர் கிருமிப்பரவலில் இருந்து மீண்டுவரும் நிலையில், உலகளாவிய நிலையற்றதன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் சபை தொடர்ந்து இரண்டு வகைகளில் முக்கியப் பங்காற்றலாம் என்றார் அவர்.
முதலாவது உருமாற்றத்துக்கான துடிப்புமிக்க உந்துசக்தியாக விளங்குதல்; இரண்டாவது, சிங்கப்பூரின் வாழ்க்கை முறைக்கு உணர்வுபூர்வமான ஆதரவை வழங்குதல் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.
பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான அவர், சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழில் சபையின் 61ஆவது மன்றப் பொறுப்பேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சி நேற்று வர்த்தகச் சங்க நடுவ அரங்கில் நடைபெற்றது.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்புச் சாதனங்கள் ஆகியவற்றுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டபோது சபை அதன் உலகளாவிய தொடர்பைப் பயன்படுத்தி அவற்றைப் பெற்றுத்தந்ததைத் துணைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்.
மேலும் சபை அரசாங்கத்துக்குத் தெரிவித்த கருத்துகள் நெருக்கடி நேரத்தில் வர்த்தகங்களுக்கு உதவும் அரசாங்கக் கொள்கைகளை வடிவமைப்பதில் உதவியாக இருந்தன என்றார் துணைப் பிரதமர்.
அத்தகைய பங்களிப்பைச் சபை தொடர்ந்து ஆற்றவேண்டும் என்றும் திரு ஹெங் வலியுறுத்தினார்.

