கடல் நீர்மட்டம் சார்ந்த மோசமான பேரிடர்களிலிருந்து சிங்கப்பூரின் கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க வருங்காலத்தில் தடுப்புகள் போடப்படலாம். நெதர்லாந்து போன்ற நாடுகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்க இத்தகைய தடுப்புகள் கைகொடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் தென்மேற்குக் கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க இத்தகைய தடுப்புகளைப் போடுவது குறித்து பொதுப் பயனீட்டுக் கழகம் ஓர் ஆய்வை நடத்தி வருகிறது.
கடல் நீர் மட்டம் அதிகரித்தால் சிங்கப்பூரின் கடற்கரைப் பகுதியைப் பாதுகாப்பது இதன் இலக்கு. சிங்கப்பூருக்கு அருகே உள்ள பகுதிகளில் புயல் காற்று வீசினால் இந்நிலை உருவாகலாம்.
பருவநிலை மாற்றத்தால் கடல் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கடல் சம்பந்தப்பட்ட மோசமான இயற்கைப் பேரிடர்கள் நேரலாம். மேலும், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
கடலின் ஆழம், காற்றின் வேகம் உள்ளிட்ட அம்சங்களைப் பொறுத்து சிங்கப்பூரில் கடல் நீர் மட்டம் உயரக்கூடும்.
சிங்கப்பூரின் தென்மேற்குக் கடற்கரையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தளவாடம், எரிசக்தி, ரசாயனம் உள்ளிட்டவை தொடர்பிலான நடவடிக்கைகள் தென்மேற்குக் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்படுவதாக பொதுப் பயனீட்டுக் கழகத்தின் கடற்கரைப் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் திருவாட்டி ஹேசல் கூ கூறினார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
"கடல் நீர் மட்டம் அளவுக்கு அதிகமாக உயர்ந்தால் கடற்கரைத் தடுப்புகள் நல்ல தீர்வாக அமையலாம், கப்பல் போக்குவரத்தும் கடற்துறை நடவடிக்கைகளும் அதிகம் பாதிப்படைவதைத் தடுக்க அவை எவ்வாறு உதவும் என்பது ஆராயப்படும்," என்று பொதுப் பயனீட்டுக் கழகத்தின் கடற்கரைப் பாதுகாப்புப் பிரிவு கூறியது.
தென்மேற்குக் கடற்கரைப் பகுதிக்கும் ஜூரோங் தீவுக்கும் இடையே குறுகிய நீர்ப்பகுதி அமைந்துள்ளது. அது, தடுப்புகளை எழுப்புவதற்கு வகைசெய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
தடுப்புகளைப் போடுவது குறித்த ஆய்வு மூன்று பகுதிகளை ஆராயும். ஜூரோங் தீவின் வடக்குக் கடற்கரைப் பகுதி, பாசிர் பாஞ்சாங் முனையம், துவாஸின் ஒரு பகுதி ஆகியவை ஆராயப்படும். இந்த ஆய்வு ஈராண்டுகளுக்கு நீடிக்கும்.

